Thursday, July 24, 2008

மருத்துவ சிகிச்சை தொடர்கிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரு தினங்கள் கழித்து அருமை நண்பரும் சக பதிவருமான சீனாவும் அவரின் மனைவியாரும் நேரில் வந்து நலம் விசாரித்தார்கள்.அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

உடனடியாகக் கொடுக்கப்படவேண்டிய சிகிச்சைகள் கொடுத்து முடிந்தன.முன்பு அவாஸ்டின் என்ற மருந்து கொடுத்ததைப் போல் இன்றைய தேதிக்குப் புதிதாக ஏதேனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருந்தால் அதனைத் தயங்காமல் கொடுக்க ஏற்பாடு செய்யும்படியும்,செலவைப் பற்றிக் கவலை இல்லை என்றும் டாக்டரிடம் கூறினேன்.பெரும்பாலான மருந்துகள் அனைத்துமே அனுவுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன என்றார் டாக்டர்.அனுவின் இன்றைய நிலையை அனுசரித்து"TEMOZOLOMIDE--250 mg"என்ற கேப்சூல் வடிவிலான கீமோ மாத்திரையை ஐந்து நாட்களுக்குக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதன்படியே சென்ற22ந் தேதி செவ்வாய்க் கிழமை முதல் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.காலை ஆறு மணிக்கு எல்ட்ராக்சின் என்ற தைராய்டு மாத்திரை,ஏழு மணிக்கு எமிசெட் என்ற வாந்தி வருவதைத் தடுக்கும் மாத்திரை,எட்டு மணிக்கு மேற்சொன்ன டெமோசோலமைட் என்ற கீமோ மாத்திரை ஆக இம்மூன்று மாத்திரைகளும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.அவ்வாறே அனு உட்கொண்டு வருகிறாள்.வரும் சனிக்கிழமையோடு முடியும்.அதன் பின் 23 நாட்களுக்கு மேற்படி மாத்திரை இல்லை.இவ்வாறாக 28 நாட்கள் கொண்ட ஒரு சுற்று முடிவுற்றபின் அடுத்த மாதம் 18ந் தேதியன்று மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள்.இடைப்பட்ட நாட்களில் மீண்டும் வலிப்பு வராமல் தடுக்க வேண்டிய மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளவும் சொல்லி இருக்கிறார்கள்.

நேற்று 23ந் தேதி அனுவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்.மிகவும் அசதியாக இருந்தாலும் மன உறுதியுடன் இருக்கிறாள்.

..........................................அனுராதாவின் கணவன்.............................................................

Thursday, July 17, 2008

மருத்துவமனையில் அனுராதா

நேற்று மதியம் இரண்டு மணி அளவில் சாப்பிட உட்கார்ந்தோம்.ஃபேனைப் போடவா என்று கேட்டுக் கொண்டே எழுந்தேன்.பேசாமல் என்னையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.என்னமோ சொல்ல வந்தவளுக்கு நாக்கு குழறியது.சேரிலிருந்து சாய்ந்தாள்.உடனே தாங்கிப் பிடித்துக் கொண்டேன்.வலிப்பு வந்தது.ஒரு நிமிடத்தில் சரியானது.உடனே மருத்துவமனைக்குக் கொண்டு வந்து தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சேர்த்திருகிறேன்.மறுபடியும் இருமுறை வலிப்பு வந்தது. மருத்துவ சிகிச்சை கொடுக்கப் பட்டு வருகிறது.இப்போது நன்றாக இருக்கிறாள். பேசுகிறாள்.

...........................அனுராதாவின் கணவன்...................................................

Thursday, July 3, 2008

விதி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது?

மனதைக் கல்லாக்கிக் கொண்டு இதை எழுதுகிறேன்.

இந்தப் பதிவின் விபரம் அனுவுக்குத் தெரியாது.

ஒரு வாரத்திற்கு முன் நான் வெளியே சென்று வீட்டுக்குத் திரும்பினேன்.
கதவைத் திறந்த அனுராதா மீண்டும் கதவை மூடாமல் அப்படியே
நின்று கொண்டிருந்தாள்.ஹாலைத் தாண்டியபிறகு தற்செயலாகத் திரும்பிப்
பார்த்தேன்."ஏன் அங்கேயே நிற்கிறாய் அனு?"என்று கேட்டேன்.அனு பதில் ஏதும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தாள்.சட்டென்று உறைத்தது.
உடனே ஓடிப் போய் அனுவைப் பிடித்துக் கொண்டேன்."என்ன செய்யுது?"
என்று கேட்டேன்."தலை பாரமா இருக்கு.கால் ரெண்டும் ஒரே அசதியா இருக்கு"என்றாள்.ஒரு முப்பது வினாடிக்குள் அனு சுதாரித்துக் கொண்டாள்.

மதிய உணவு உட்கொண்டபின் மாத்திரைகளைக் கொடுத்தேன்.தொடர்ந்து அனுவைக் கவனிக்கத் தொடங்கினேன்.மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.
பேசுவதில் சிறிது மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருந்தது.கொஞ்சம் இழுத்துப்
பேசினாள்.உடனே டாக்டரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.அவரது அறிவுரைகளின்படி மாத்திரை கொடுத்தேன்.மாலை வரை ஒரு பிரச்சனையும் இல்லை.

அன்று இரவு எங்கள் மகனுடன் தொலைபேசியில் பேசும்போது தயங்கித் தயங்கிப் பேசினாள்.என் மகன் உடனே வித்தியாசத்தைப் புரிந்து கொண்டான்.பிறகு என்னிடம் பேசும் போது பகலில் நடந்ததைச் சொன்னேன்.

கடந்த 01/07/2008 திங்களன்று மருத்துவமனை சென்றோம்.எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டது.டாக்டரிடம் காண்பித்தோம்.
"ஒன்றுமில்லை.ஏற்கனவே மூளையில் கட்டி இருந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது.இரண்டு வாரங்கள் மாத்திரைகள் சாப்பிட்டால் வீக்கம் குறைந்து விடும்.ஒன்றும் பிரச்சனை இல்லை" என்றார்.மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

மறுநாள்(நேற்று)வெளியே போவதாகச் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குச்
சென்று டாக்டரைச் சந்தித்தேன்."உங்களிடமிருந்து போன் எதிர்பார்த்தேன்.நல்லவேளை நேரிலேயே வந்துவிட்டீர்கள்."என்றார்.
"கவலை அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால்,அனுவுக்கு மீண்டும் மூளையில் புற்றுநோய் தாக்கி இருக்கிறது.முன்பு இருந்த இடத்திலேயே வந்திருக்கிறது.இரண்டு வாரம் மாத்திரை கொடுத்திருக்கிறேன் அல்லவா.அதைத் தவறாமல் கொடுங்கள்.இரண்டு வாரத்தில் வீக்கம் முற்றிலும் குறைந்து விடும்.இரண்டு மூன்று நாடகளில் முன் போலவே பேச ஆரம்பித்து விடுவாள்.இரண்டு வாரம் கழித்து அழைத்து வாருங்கள்.மேற்கொண்டு கொடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அப்போது பேசுவோம்"என்றார்.
"மீண்டும் அவாஸ்டின் போன்ற மருந்து,கீமோ கொடுக்க வேண்டுமா"என்று கேட்டேன்.
"கொடுக்கலாம்.அவாஸ்டின் மருந்து நன்றாகவே வேலை செய்தது. கீமோ மருந்து தான் ஒத்துக் கொள்ளவில்லை.இப்போது கீமோ மாத்திரைகளுடன் அவாஸ்டின் கொடுப்பதா அல்லது வேறு என்ன செய்யலாம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.பிரச்சனை என்னவென்றால் அனுவுக்கு மீண்டும் புற்றுநோய் தாக்கி இருப்பது கொஞ்சம் சீரியசான விஷயம். சென்ற நவம்பர் மாதம் சிகிச்சை கொடுக்கும்போதே பிழைப்பது கடினம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கொடுக்கப்பட்ட சிகிச்சைகளும் இவரது மன உறுதியும் சேர்ந்து இந்த அளவுக்குக் குணம் அடைந்திருக்கிறார்.ஆனால் இப்போது இன்னும் சீரியஸ்.பார்த்துக் கொள்ளுங்கள்.
Her life span is limited.But how for long?I don't know"என்றார்.

செலவைப் பற்றிப் பிரச்சனை இல்லை என்றும்,என்ன சிகிச்சை கொடுக்கவேண்டுமோ தயங்காமல்,தாமதமில்லாமல் கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும் டாக்டரிடம் கூறிவிட்டு வெளியே வந்தேன்.

இந்த விபரங்கள் எதுவும் அனுவுக்குத் தெரியாது.

இன்றெல்லாம் முன்போலவே அனு நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள்.

................................. அனுராதாவின் கணவன்.............................