Tuesday, October 16, 2007

லிம்ப் கிளான்ஸ் டிஸெக்சனும்,அதன் பின்விளைவுகளும் 1

12.09.2004ந்தேதிகாலை பத்து மணிக்கெல்லாம் பேட்டர்சன் கேன்சர் செண்டருக்குச் சென்றுவிட்டேன்.அது அமைந்துள்ள விஜயா ஹெல்த் செண்டரில் அட்மிட் ஆனேன்.ராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையில் இருந்து போஸ் என்ற சர்ஜன்(இவர்தான் ஆபரேசன் செய்தாராம்),முன்னரே அறிமுகமான சர்ஜன் பிரசாத் ஆகியோர் வந்து பார்த்தனர்.அன்றைக்கு மதியம் இரண்டு மணியளவில் ஆபரேசன் தியேட்டருக்குக் கொண்டு செல்லப்பட்டேன்.மயக்க மருந்து கொடுக்கப்பட்டு ஆபரேசன் செய்யப்பட்டது.
மதியம் மூன்றரை மணியளவில் ரூமிற்குக் கொண்டு வரப்பட்டேன்.
சீக்கிரமே மயக்கம் தெளிந்துவிட்டது.வலதுகை அக்குளில் ஆபரேசன் செய்திருந்த இடத்தைப் பெரிய பிளாஸ்டர் கொண்டு ஒட்டியிருந்தார்கள்.அதனுள்ளிருந்து ஏற்கனவே சொன்னபடி ஒரு டியூப் தொங்கிகொண்டிருந்தது .அதன் மறுமுனை வட்டமான ஒரு பிளாஸ்டிக் டப்பாவுடன்(சக்சன் பாக்ஸ்)இணைக்கப்பட்டிருந்தது.ஆபரேசன் செய்த சர்ஜன் போஸூடன் என் கணவர் விபரங்களைக் கேட்டறிந்திருந்தார்.ஆபரேசன் நல்லபடியாக முடிந்ததாம்.மொத்தம் பத்தொன்பது கிளான்ஸ்கள் இருந்ததாம்.அனைத்தும் அகற்றப்பட்டனவாம்.
மார்பகத்திலிருந்து சுரக்கும் நிணநீரானது கிளான்ஸ்கள் இல்லாததால் டியூப் வழியாக சக்சன் டப்பாவுக்குள் சேர்ந்துகொண்டிருந்தது.ஏறத்தாழ டப்பா நிரம்புவதற்கு முன் எடுத்து எவ்வளவு நீர் வெளியேறியுள்ளது என்பதை அளந்து குறிக்கப்பட்டது.காலையும் மாலையும் டாக்டர்கள் வந்துசென்றனர்.
மூன்றாவது நாளன்று பிளாஸ்டரை அகற்றி விட்டுசிறிய பிளாஸ்திரியை
ஒட்டிவிட்டனர்.
வலி?அதுபாட்டுக்கு வலித்துக்கொண்டு இருந்தது.வலியுடன் வாழப் பழகி விட்டேனே!
இப்போது வேறு பிரச்சனை முளைத்தது.பாத்ரூமிற்குச் செல்ல வேண்டுமென்றால் ஆடாது அசங்காது டியூபையும் சக்சன் டப்பாவையும் கூடவே எடுத்த்ச் செல்ல வேண்டும்.அக்குளில் இணைக்கப்பட்டுள்ள டியூப் கொஞ்சம் ஆடினாலும் வலி உச்சந்தலையைத் தாக்கும்.உயிர் போய் உயிர் வரும்.டாக்டரிடமோ நர்சிடமோ சொன்னால் உடனே பெட் பேன் எடுத்து வைப்பார்கள்.பெட் பேன் உபயோகிக்க விருப்பமில்லை.அது அவ்வளவு சுத்தம்.எனவே என் கணவர் உதவியுடன் பாத்ரூமிற்குப் போய் விடுவேன்.
நான்காவது நாளன்று சர்ஜன் பிரசாத் வந்து பரிசோதித்துப் பார்த்தார்.சக்சன் பாக்ஸைப் புதிதாக மாற்றச் சொன்னார். உடனே மாற்றப்பட்டது."நாளைக்குள் நீர் சுரப்பது குறைந்துவிடும்.அதுக்கப்புறம்
கையை மெதுவாஆட்ட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகக் கையைச் சுழற்ற வேண்டும்.கைக்குப் போட்டுக் கொள்ள ஒரு கிளொவ்ஸ் எழுதித் தருகிறேன்.இரண்டு கிளொவ்ஸ் வாங்கிக்கொள்ளுங்க.தினமும் காலை குளித்தபின் வலது கையில் இந்த கிளொவ்ஸ் மாட்டிக் கொள்ளுங்க.மறுநாள் காலை வரை அதைக் கழற்றக்கூடாது. இப்படியே ஆறு மாதம் வரை கிளொவ்ஸ் போடவேண்டும்.மறக்காமல் கைக்கு நல்ல எக்சர்ஸைஸ் கொடுக்க வேண்டும்.''
அவர் சொல்லிக்கொண்டே போனார்.
ஐந்தாவதுநாள் வந்தது.அன்று மதியம் டிஸ்சார்ஜ் என்றார்கள்.நிணநீர் வெளியேறுவது கொஞ்சமும் குறைந்தபாடில்லை. எனவே டியூபுடனும் சக்சன் டப்பாவுடனும் வீட்டுக்குப் போங்க என்றார் டாக்டர்.என்ன சார்.ஐந்தாவது நாளன்று டியூபை அகற்றிவிடுவோம் என்றீர்களே?என்றேன்.
ஆமா.சொன்னேன்.நிண நீர் வருவது குறையவில்லையே,இன்னும் ஒரு ஐந்து நாள் பார்ப்போமே.டியூபுடன் வீட்டுக்குப் போங்க.தினமும் வெளியேறும் நிணநீரைக் கணக்கெடுங்க.ஒரு நாளுக்கு பத்து பதினைந்து எம்எல் அளவு வந்தா உடனே இங்கு வாங்க.டியூபை எடுத்துடுவோம்."என்றார் டாக்டர்.
எப்படி இருந்திருக்கும் என்கிறீர்கள்?
இந்தநோயால் நான் பாதிக்கப்பட்ட விபரமே வெளியே ஒருத்தருக்கும் தெரியாது.சேலை கட்டி வெளியே செல்வது ஏற்கனவே அரிதாகிவிட்டது.இப்போது ஃபுல் ஓபன் நைட்டியுடன் தானிருக்கவேண்டிய கட்டாயம்.இந்த அழகில் ஒரு சைடில் டியூப் தொங்க அதன் முனையில் சக்சன் டப்பா தொங்க டப்பாவைக் கையில் பிடித்துக்கொண்டு காரை விட்டு இறங்கி தெருவிலிருந்து நடந்து வீட்டுக்கு எப்படி செல்வது?யாரேனும் பார்த்தால்?என்னவென்று கேட்கமாட்டார்களா?என்ன பதில் சொல்வேன்?ஐயையோ!பிறகு யாரேனும் பார்க்க வந்தால்?வேலைக்காரியை எப்படிச் சமாளித்து வேலை வாங்குவது?
இதையெல்லாம் டாக்டரிடம் கேட்டேன்.
"இதில் என்ன இருக்கிறது?யாரேனும் கேட்டால் உள்ளதைச் சொல்லுங்களேன்.''
''அது முடியாது டாக்டர்''
''அப்புறம் உங்க இஷ்டம்.நாங்க டிஸ்சார்ஜ் செய்து விடுகிறோம்.''
அவருக்கு அவர் பிரச்சனை.
மனமென்னும் குரங்கு நோயை மறந்துவிட்டது.எதிரே இருக்கும் சமூகத்தைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்துவிட்டது.சும்மாவே வெறும் வாயை மெல்லும் இந்தக் கேடு கெட்ட சமுதாயத்துக்குக் கொஞ்சம் அவல் கிடைத்த மாதிரி அல்லவா எனது பிரச்சனை ஆகிவிடும்?
'' சரி சார்.டிஸ்சார்ஜ் செய்துவிடுங்கள்''
''அப்புறம் எங்கே போவீங்க?''
''அதை நான் பார்த்துக் கொள்கிறென்.இந்த மருத்துவமனையில் கஸ்ட் ரூம்கள் எதற்கு இருக்கின்றன?''என்றேன்.
டிஸ்சார்ஜ் ஆனதும் மருத்துவமனையில் உள்ள விருந்தினர் இல்லத்திற்குச் சென்றோம்.வசதியான அறையை எடுத்துக்கொண்டு ஐந்து நாட்கள் தங்கினோம்.
ஆறாவது நாளாகியும்அதாவது ஆபரேசன் நடந்து பத்துநாட்களாகியும் நிணநீர் சுரந்து வெளியேறுவது குறையவில்லை.அன்று பிற்பகல் டாக்டரைச் சந்தித்தோம்.மிகச் சில பேர்களுக்கு நிணநீர் சுரப்பது நிற்க ஒரு மாதம் கூட ஆகுமாம்.எனவே இன்னும் ஒரு ஐந்துநாட்கள் பார்ப்போமே என்றார்.
இப்போது வலி மிகவும் குறைந்திருந்தது.ரூமிற்கு வந்தோம்.இன்னும் எத்தனை நாட்கள் வீட்டுக்குப் போகாமல் இருப்பது.
டியூபையும் சக்சன் டப்பாவையும் நைட்டிக்குள் மறைத்துப் பிடிக்க முடியுமா என்பதை முயன்று பார்த்தேன்.சிறிது நேரத்தில் பழகிவிட்டது.
மறு நாள் மாலை விருந்தினர் இல்ல அறையைக் காலி செய்து விட்டு வீட்டுக்கு வந்தோம்.நல்லவேளை.தெருவிலோ,வாசல் பக்கமோ யாரும் இல்லை.யாரும் கவனிக்கவில்லை.மிக லாவகமாக டியூபையும் சக்சன் டப்பாவையும் கையில் பிடித்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்து விட்டேன்.
எனது செயல் சுத்தப் பைத்தியக்காரத்தனமானது தான்.நோயைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிவிட்டால்தான் என்ன?யார் என்ன செய்துவிட முடியும்?என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழலாம். கண்டிப்பாக எழும்.
எனது செயல் நியாயமானதா இல்லையா என்பதற்கான விவாதங்களை பதிவுகளின் இறுதியில் வைத்துக் கொள்வோமே!இது தொடர்பாக இன்னும் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை அடுத்து வரும் பகுதிகளில் சொல்லவிருக்கிறேன்.அதுவரை அருள் கூர்ந்து பொறுங்கள்.

5 comments:

இலவசக்கொத்தனார் said...

இந்த கிளான்ஸை எடுத்துவிட்டால் அது பொதுவாக செய்யும் வேலை என்னவாகும்? உங்களுக்குத் தெரியுமா? அல்லது அப்பெண்டிக்ஸ் போன்று எடுப்பதால் பாதகமில்லையா?

கோபி said...

Please take part in testing Tamil Domain

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

அனுராதா said...

வாங்க இலவசக் கொத்தனார்.அடுத்த பதிவைப் பாருங்க.
வாங்க கோபி.என்ன சொல்ல வர்ரீங்க?

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி,

மிக மிகப் பொறுமையாக, சில தினங்களாக, காத்திருக்கிறேன் இன்றைய நிலவரம் அறிய. நல்லதொரு செய்தியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

அன்புடன் சீனா.

அனுராதா said...

வாங்க சீனா.காத்திருங்கள்.நன்றி