Wednesday, October 17, 2007

லிம்ப் கிளான்ஸ் டிஸெக்சனும்,அதன் பின்விளைவுகளும் 2

வீட்டுக்கு வந்து மூன்று நாட்கள் கழித்தும் கூட, வெளியேறும் நிணநீரின் அளவு பதினேழு,பதினெட்டு எம்எல் அளவுக்கும் குறைந்தபாடில்லை.டாக்டர் பிரசாத்தைத் தொடர்புகொண்டோம்.உடனே மருத்துவமனைக்கு வரச் சொன்னார்.சென்றோம்.ஆபரேசன் செய்த டாக்டர் போஸைத் தொடர்பு கொண்டதாகவும் இவ்வளவு நாட்கள் டியூபை அகற்றாமல் இருப்பது நல்லதில்லை என்றும் உடனே அகற்றுமாறும் கூறியதாக டாக்டர் பிரசாத் சொன்னார்.டியூபை அகற்றிவிட்டார்.மேற்கொண்டு சுரக்கும் நிணநீர் அக்குளுக்குப் பின்பக்கம் முதுகுப் பக்கத்தில் உள்ள வேறு கிளான்ஸுகள் வழியாக வெளியேற ஆரம்பிக்கும் என்றும் சொன்னார்.அன்றைய நாள் முதல் நாள் தவறாமல் கிளொவ்ஸ் போட்டுக் கொள்ளுமாறும் கைகளை நன்றாக வீசியும் ஆட்டியும் எக்ஸர்ஸைஸ் செய்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள ஆசியன் கேம்ஸ் குடியிருப்பில் உள்ள ஒரு முகவரியைக் கொடுத்தார்.அங்கே "நோர்மா" எனும் டெல்லி நிறுவனத்தின் பிரதிநிதி இருப்பார் என்றும் அவரிடம் தொகையைச் செலுத்திவிட்டால் இரண்டுநாளைக்குள் கூரியரில் கிளொவ்ஸ் வந்துவிடும் என்றார்.
டாக்டர் கூறியவாறு 'நோர்மா''விற்பனைப் பிரதிநிதியைத் தேடிச் சென்றோம்.
அவர் அங்கு இல்லை. கைப் பேசியில் தொடர்பு கொண்டோம்.என் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டார்.வெளியூரில் இருப்பதாகவும் இரு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்து அளவு எடுப்பதாகவும் சொன்னார்.இடைப்பட்ட நாட்களில் சமாளிக்க வீட்டுக்கு அருகில் உள்ள ஃபார்மஸிக்குச் சென்று விளையாட்டு வீரர்கள் முழங்காலில் அணிந்து கொள்வார்களே அதுமாதிரியான கிளொவ்ஸ்களை வாங்கிக் கொண்டோம்.என் கணவருக்கு 1998ஆம் ஆண்டில் மாற்று வழி இதய அறுவை சிகிச்சை செய்தபின் இரு கால்களிலுமிருக்கமாக கம்ப்ரசன் எலாஸ்டிக் துணி டேப்கள் அணிந்திருந்த அனுபவம் இருந்ததால் புதிதாக அவற்றையும் வாங்கினோம்.''நோர்மா''பிரதிநிதி இருநாட்களுக்குப் பின் வீட்டுக்கு வந்து வலது கையிலிருந்து தோள்பட்டைவரை பல அளவுகள் எடுத்தார்.அடுத்த இருநாட்களில் ''நோர்மா கிளொவ்ஸ்கள் கூரியரில் வந்தன.டெல்லியிலிருந்து ''நோர்மா''கிளொவ்ஸ்கள் வரும்வரை மேற்சொன்ன கிளொவ்ஸ்கள்,கம்ப்ரசன் எலாஸ்டிக் டேப்கள் கை கொடுத்தன.

பிரச்சனையே அதற்குப்பிறகுதான் ஆரம்பித்தது.டாக்டர் சொன்னபடி கையை ஆட்ட முயன்றேன்.முடியவில்லை.மிகவும் சிரமப்பட்டு கையை ஆட்டியும் வீசியும் முடிந்தவரை பயிற்சி செய்தேன்.வலி ஒருபக்கம் இருக்க கை ஒருஅளவுக்குமேல் அசைக்க முடியவில்லை.இரவுபகல் என்றில்லாமல் எப்போதுமே ''நிர்மா''கிளொவ்ஸ் அணிந்திருப்பதில் நல்ல இறுக்கம் இருந்தாலும் ஒரு தொந்தரவாகவே இருந்தது.பொறுத்துக்கொண்டு அணிந்தேன்.

மூன்று நாள் சென்றபின்னும் கை அசைப்பதில் சிரமம் கூடுவதை உணர்ந்தேன்.அன்றே பேட்டர்ஸன் கேன்சர் செண்டருக்குச் சென்று எங்கள் டாக்டரை(விஜயராகவன்)ப் பார்த்தோம்.டாக்டரல்லவா!அவருக்கே உரிய பாணியில் கையை இழுத்தும்,முறுக்கியும்,தோள்பட்டைப் பகுதியில் பிசைந்தும் பிசியோதைரபி சிகிச்சை செய்தார்.சிகிச்சை செய்து முடிப்பதற்குள் வலி ஆஹா,என்ன வலி என்ன வலி.கையைத்தனியாகக் கழற்றிவிட்டாரோ என்று நினைத்தேன்.ஒரே நிமிடம்.கையில் வலி பாதிக்குமேல் குறைந்தது.கையையும் ஓரளவுக்கு நன்றாகவே ஆட்ட முடிந்தது.

டாக்டர் சொன்னார்.''நீங்கள் பயிற்சி செய்வது போதுமானதாக இல்லை.இன்னும் நன்றாகப் பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால்
தோள்பட்டை எலும்புகள் ஒன்றுடன் ஒன்று கெட்டியாக ஒட்டிக் கொண்டுவிடும்.''என்றார்.தொடர்ந்து ஐந்து நாட்கள் பிசியோதைரபி சிகிச்சை செய்துகொள்ளும்படியும்,வீட்டுக்கு அருகில் பிசியோதைரபி சிகிச்சை வசதி உள்ள மருத்துவமனையில் செய்துகொள்ளுமாறும்,ஆறாவது நாள் தன்னை வந்து பார்க்குமாறும் சொன்னார்.என்னவகையான பிசியோதைரபி செய்யவேண்டும் என்பதற்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்.

மறுநாள் வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் கொடுத்த கடிதத்தைக் கொடுத்தோம்.அங்கிருந்த பிசியோதைரபிஸ்ட் வலப்புற முதுகின் மேல்பக்கம்தோள்பட்டைக்கு அருகில் ஜெல் தடவி அதன் மீது இன்னொரு கருவியை வைத்து மசாஜ் செய்தார்.மறுநாளும் இதே சிகிச்சை செய்துகொண்டேன்.மூன்றாவது நாள் சென்றபோது இயந்திரம் பழுதாகி இருந்தது.எனவே அருகிலுள்ளதனியார் ஒருவர் நடத்தும் இன்னொரு பிசியோதைரபிஸ்ட்டுடைய முகவரி அறிந்து மேலும் மூன்று நாட்கள் சிகிச்சையைத் தொடர்ந்தேன்.முடிந்தவரை கைகளை ஆட்டியும் அசைத்தும் பயிற்சி செய்துகொண்டே இருந்தேன்,

கைகளை அசைப்பதில் முன்னேற்றமில்லை.டாக்டர் சொன்னமாதிரி எலும்புகள் ஒட்ட ஆரம்பித்துவிட்டதோ என்று சந்தேகம் ஆரம்பித்தது.அன்று மாலையே மருத்துவமனை சென்று டாக்டரைச் சந்தித்தேன்.முன்செய்தது போலவே டாக்டர் கைகளை முறுக்கி ஒருமாதிரியாக சிகிச்சை செய்தார்.கை ஆட்ட முடிந்தது.கயை முறுக்கும்போது வலி இருந்த்து.இப்போது வலி இல்லை.
நான் வெளியே செய்துகொண்ட எக்ஸர்ஸைஸ் டாக்டருக்குத் திருப்தி அளிக்கவில்லை.எனவே விஜயா ஹெல்த் செண்டரில் பணி புரியும் பிசியோதைரபிஸ்டை மறுநாள் முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வீட்டுக்கு அனுப்பி விட்டார்.அவரோ பழைய பிசியோதைரபிஸ்ட் செய்த அதே முறையைக் கடை பிடித்தார்.விபரங்களைச் சொல்லியும் டாக்டர் என்ன சொல்லியிருக்கிறாரோ அதைத் தான் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு சிகிச்சையைத் தொடர்ந்தார்.

ஐந்து நாட்களுக்குப் பின் டாக்டரைச் சந்திதோம்.டாக்டருக்கே வெறுப்பாகி விட்டது.நான் ஒண்ணு சொன்னா இவங்க ஒண்ணு செய்றாங்களே என்று சொல்லிகொண்டே அவர் தனது சிகிச்சையைத் தொடர்ந்தார்.
ஒரு வாரம் தினமும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சையை
செய்திகொள்ளுமாறும் சொன்னார்.ரப்பர் பந்து வாங்கி வலது கையில் வைத்துப் பிசைந்துகொண்டே இருக்குமாறும்,நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் பந்து பிசையும் பயிற்சி செய்துகொண்டே இருக்குமாறும் சொன்னார்.

மறுநாளிலிருந்து தொடர்ந்து ஒரு பத்து நாட்கள் மருத்துவமனையில் உள்ள நர்சிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக கை சரியானது. இருப்பினும் பழைய நிலைக்கு வரவில்லை.

இச்சமயத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் ஏற்கனவே அறிமுகமானவரை(இவர் கதையைப் பின்னால் சொல்கிறேன்)த் தொடர்புகொண்டு பேசியதில் தனக்குத் தெரிந்த ஜெயா என்பவர் அடையாறு மருத்துவமனையில் தன்னார்வமாக பிசியோதைரபி சிகிச்சை செய்து வருவதாகவும்,அவரிடம் மேற்கொண்டு சிகிச்சை பெறுமாறும் ஆலோசனை கூறினார்.

மேற்சொன்ன ஜெயா என்பவர் பிசியொதைரபி முறையாகப் பயின்றவர்.அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணி புரிகிறார்.
பணிநேரம் போக தினமும் பத்து நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கிறார்.அவரே மூன்றுநாளுக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து எனக்கு சிகிச்சை அளித்தார்.நிவ்யா கிரீம் கொண்டுவரச் சொல்லி அதைத் தடவி மிகநன்றாக மசாஜ் செய்தார்.சில உடற்பயிற்சிகளையும் கற்றுத் தந்தார்.
இரண்டு மாதம்வரை சிகிச்சை அளித்தார்.

கையின் இயக்கம் ஏறத்தாழ நன்றானது.இன்றுவரை கைக்கு நல்ல பயிற்சி கொடுக்கிறேன். இருந்தாலும் இடது கையைவிட வலது கை கொஞ்சம் வீக்கமாகவே இருக்கிறது.வலி கொஞ்சம் இருக்கிறது.


சொல்ல மறந்துவிட்டேனே!சர்ஜரி செய்து எடுக்கப்பட்ட பததொன்பது கிளான்ஸ்களில் ஒன்றில் கூட கேன்சர் செல்கள் இல்லையாம்!பயாப்ஸி செய்து பார்த்ததில் இந்த் ரிசல்ட் வந்திருப்பதாக்ச் சொன்னார்கள்.''அப்புறம் ஏன் ஆபரேசன் செஞ்சீங்க"என்று டாக்டரைக்கேட்டேன்.ஆபரேசன் செஞ்சு பயாப்ஸி செய்து பாத்ததுக்கப்புறம் தானே இந்தவிபரம் தெரியுது?"என்றார்.

3 comments:

வடுவூர் குமார் said...

சங்கிலித்தொடர் போல் தொடருகிறதே!!
படிக்கவே கஷ்டமாக இருக்கு.

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி,

தாங்கள் படும், தொடரும் துன்பம் சீக்கிரமே தீர எல்லாம் வல்ல இறையை வணங்கி வாழ்த்துகிறேன்

அன்புடன் சீனா

அனுராதா said...

வாங்க வடுவூர் குமார்,சீனா.இன்பம்,துன்பம் இரண்டும் வாழ்க்கைச் சக்கரத்தின் அடுத்தடுத்தப் புள்ளிகள்.ஒன்றை ஏற்கும்போது மற்றொன்றையும் ஏற்கத்தானே வேண்டும்.