Sunday, October 21, 2007

ஹெர்சப்டின் என்னும் அதிசய ஹார்மோன் மருந்தும் கீமோ மருந்துகளும்

2006 டிசம்பர்ஒன்றாம் தேதி காலை பத்து மணிக்கெல்லாம் பேட்டர்சன் கேன்சர் சென்டருக்கு வந்து டாக்டரைச் சந்தித்தோம்.எத்தனை ஊசிகள் போட வேண்டும் என்றும் அதற்கான கால அளவுகளும் சொன்னார்.
ஹார்மோன் மருந்து
ஹெர்சப்டின்.......................மாதம் ஒன்று வீதம் ஆறு மாதங்களுக்கு 6
கீமோ மருந்துகள் பின்வருமாறு
டாசிடாக்சல்........................மாதம் ஒன்று வீதம் நான்கு மாதங்களுக்கு 4
வினோரல்பின்......................வாரம் ஒன்று வீதம் எட்டு வாரங்களுக்கு 8
இவைகள் முதலில் முடியட்டும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பிறகு சொல்கிறேன் என்றார்.

அன்று பிற்பகல் இரண்டு மணியளவில் விஜயா ஹெல்த் சென்டரில் அட்மிட் ஆனேன்.மறுநாள் காலையில் டாக்டர் சொன்ன அதிக விலையுள்ள ஊசி மருந்து வந்தது.
அந்த மருந்தின் பெயர் ''ஹெர்சப்டின்''.கேன்சர் உலகில் இன்றைய தேதிக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசய மருந்து.இது கீமோ மருந்தல்ல. ஹார்மோன் மருந்து.இந்த மருந்து இரண்டு வழிகளில் வேலை செய்கிறது.கேன்சர் செல்கள் வளர்வதைத் தடுக்கிறது.உடலில் இயங்கும் பாதுகாப்பு அமைப்பைக் கேன்சர் செல்களைக் குறி வைக்குமாறு தூண்டுகிறது.

2ம் தேதியன்று மதியம் பதினோரு மணியளவில் கையில் உள்ள நரம்பைத் தேடி ஊசி ஏற்றினார்கள்.அலர்ஜிக்கும் வாந்தி வராமல் இருப்பதற்கும் இன்னும் பல தடுப்பு சிகிச்சைகளுக்கும் என ஊசி மருந்து ஏற்றினார்கள்.பனிரெண்டு மணியளவில் ஒரு லிட்டர் சலைன் பாட்டிலில் ஹெர்சப்டின் மருந்தைக் கலந்து ஏற்ற ஆரம்பித்தார்கள்.
தொடர்ந்து பனிரெண்டு மணி நேரம் மெல்ல ஏற வேண்டுமாம்.மருந்து முழுதும் முடிய இரவு ஒரு மணிக்கு மேலாகி விட்டது.

மறுநாள் 3ம் தேதியன்று காலை அரை லிட்டர் வெறும் சலைன் ஏற்றப்பட்டது.இது முடிய மூன்று மணிநேரமானது.முதல்நாளன்று போட்ட தடுப்பு ஊசிகளை இன்றும் போட்டார்கள்.பிறகு டாசிடாக்சல் என்ற கீமோ மருந்தை
அரை லிட்டர் சலைன் பாட்டிலில் ஏற்றி கைநரம்பில் ஏற்கனவே உள்ள ஊசி மூலம் ஏற்ற ஆரம்பித்தார்கள்.இதுவும் மூன்று மணி நேரம் ஏற வேண்டுமாம்.
இந்த கீமோ மருந்து ஏற ஆரம்பித்தவுடனேயே உடல் வெப்பமடைய ஆரம்பித்தது.நேரம் செல்லச் செல்ல வாய் உலர்ந்து விட்டது இரு கால்களும் சோர்வடைய ஆரம்பித்தன.மருந்து உள்ளே செல்வதினால் இப்படியெல்லாம் ஆகிறது என்று சொன்னார்கள்.
இம் மருந்து முடிந்ததும் மறுபடியும் இரண்டு அரை லிட்டர் சலைன் பாட்டில்களை தலா மூன்று மணி நேரம் வீதம் ஆறு மணி நேரம் ஏற்றினார்கள்.ஆக மொத்தம் இன்றும் பனிரெண்டு மணி நேரம் ஆனது.


அடுத்த நாள்4ம் தேதி காலை பதினோரு மணிக்கு வினோரல்பின் என்ற கீமோ மருந்தை அரை லிட்டர் சலைன் பாட்டிலில் ஏற்றி கையில் உள்ள நரம்பு ஊசிமூலமாக மூன்று மணி நேரம் ஏற்றினார்கள்.அன்று மாலை ஆறு மணி அளவில் டிஸ் சார்ஜ் ஆனேன்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிளட் டெஸ்ட் எடுத்து மருத்துவமனைக்கு விபரம் தெரிவிக்க வேண்டுமென்றும்,ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் சொன்னார்.
எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நாளாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறையெல்லாம் பிளட் டெஸ்ட் எடுத்ததில்லையே,இப்போது எடுக்க வேண்டும் என்கிறாரே!டாக்டரிடமே கேட்டோம்.உள்ளே செலுத்தப்பட்ட கீமோ மருந்துகள் கேன்சர் செல்கள் மட்டுமல்லாது நன்றாக இருக்கும் செல்களையும் தாக்கும் என்றும்,வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆகின்ற எலும்புகளிலுள்ள மஜ்ஜையையும் தாக்கும் என்றும் அதனால் வெள்ளை அணுக்கள் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும் என்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தது நான்காயிரமாவது இருக்க வேண்டும் என்றும் அதற்கும் கீழே குறைந்தால் வெள்ளை அணுக்கள் சீக்கிரமாகவும் அதிகமாகவும் வளர்வதற்காக அதற்கென உள்ள ஊசிகளைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் சொன்னார்.அதற்காகத் தான் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்க்கவேண்டி இருக்கிறது என்றார்.

சரிதான் என்று வீட்டுக்கு வந்தோம்.அடுத்ததாக கீமோ மருந்துகளின் பின்விளைவுகளால் நான் பட்ட துன்பம் அளவிட முடியாது.

9 comments:

வடுவூர் குமார் said...

கீமோ மருந்துகளின் பின்விளைவுகளால் நான் பட்ட துன்பம் அளவிட முடியாது.
அது வேறயா?
எப்படியாவது நல்ல முறையில் முடிந்தால் சரி.

cheena (சீனா) said...

சகோதரி - நான் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட என் தாயின் வேதனை அறிந்தவன். கடவுள் துணை என்று உண்டு.

அனுராதா said...

வாங்க வடுவூர் குமார்.என்னைப் பொருத்தவரைக்கும் துன்பம் எப்போதும் தொடர்கதையாகி விட்டது.
வாங்க சீனா.உங்கள் தாய் பட்ட வேதனையை நேரில் பார்த்து அறிந்திருக்கிறீர்கள்.என்ன செய்வது?
அதைப் பற்றி நினைக்கும்போதே
நீங்கள் அடையும் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

seethag said...

அனுராதா ,நேற்று எங்கள் ஊரில் பைக்கில் நிரய பேர் வந்தார்கள்.நான் கடைத்தெருவில் இருந்தேன்.அவர்கள் பேச்சில் இருந்து அந்த பெண்கள் எல்லாரும் கேன்சர் சர்வைவர்ஸ் என்று சொன்னார்கள்.நான் உடனே பேச்சு கொடுத்தேன்.
உங்களுக்காக அவர்கள் இணயதளம் முகவரி வாங்கினேன்.

www.amazonheart.org.

megan C.Dwyer.
the head of the group is from california.
san jose, california
usa.

நான் அவர்களுக்கு எழுதுவதாக வாக்கு கொடுத்துள்ளேன்.

மெல்பர்ன் லிருந்து அடிலெய்டுக்கு பயணமாக செல்வதாக சொன்னர்கள்.awareness செய்வதர்க்காக என்றும் கூறினார்கள்.

இந்தியாவில் டாக்டர் ரீடு என்றொரு பெண் கன்சர் சர்வைவராம். அவரும் இப்படி பயணித்ததாக கூறினார்கள்.

இப்படி முகவரி தருவது எதுவும் உங்கள்மேல் pressure தருவதர்காக அல்ல.take your time to explore these people.

அனுராதா said...

அருமையான தகவலுக்கு நன்றி சீதா

Ramprasath said...

God will be with you.

Vazhga Valamudan.


-Ramprasath

அனுராதா said...

வாழ்த்துகளுக்கு நன்றி ராம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

12 மணி நேரம் தொடர்ந்து செலன் ஏற்றுதல் ,புரிகிறது.. அதனுடன் உள்ள உபாதைகள்.
தங்கள் உறுதி தொடரட்டும்.

அனுராதா said...

தற்போதெல்லாம் பழகிவிட்டது யோகன் பாரிஸ்.