Sunday, October 21, 2007

கீமோ ஊசி மருந்துகளின் பின்விளைவுகள் 1

கீமோ மருந்துகளின் பின்விளைவுகள் பற்றி சில தகவல்களை ஏற்கனவே டாக்டர் சொல்லியிருந்தார்.
1.தலைமுடி பூராவும் கொட்டிவிடும்.சிகிச்சைக்குப் பின் மீண்டும் வளர்ந்து விடும்.
2.வாந்தி வரும்.வாந்தி வராமல் இருக்க மாத்திரை கொடுப்போம்.தினமும் உணவுக்குமுன் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.
3.வாய் உலர்ந்து வரும்.மலச்சிக்கல் ஏற்படும்.அல்லது டயோரியா ஏற்படும்.இவைகளைத் தவிர்க்க நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.
பொதுவாக ஒருவருக்கு ஏற்படும் பின்விளைவுகள் இன்னொருவருக்கு ஏற்படாது.ஒருவருக்கொருவர் வித்தியாசப்படலாம்.

வீட்டுக்கு வந்ததிலிருந்தே உடல் சோர்வடைய ஆரம்பித்தது.வயிறெல்லாம் எரிந்தது.இரு கால்களும் என்னமோ பத்துமைல் தூரம் ஓடிவந்தால் எப்படி வலிக்குமோ அப்படி வலிக்க ஆரம்பித்தன.தண்ணீர் குடிக்கவே வெறுப்பாக இருந்தது.மறுநாளிலிருந்து தண்ணீர் குடித்தாலே வாந்தி வந்தது.இளநீரைக் கொண்டு வரச்சொல்லிக் குடிக்க ஆரம்பித்தேன். சுகர் அளவு அதிகரிக்க ஆரம்பித்தது.என்ன செய்வது.டாக்டரிடம் கேட்டேன்.இளநீரை அளவோடு குடிக்கலாம் என்றும் தண்ணீர் அதிகமாகக் குடிக்கவேண்டும் என்றும் கூறினார்.தண்ணீர் அதிகமாகக் குடிக்கக் குடிக்க கீமோ மருந்துகளின் பாதிப்பு குறையும் என்றார்.

இவைகளையெல்லாம் ஓரளவு சமாளித்துவிட்டேன்.மிகவும் பாதித்தது மலச்சிக்கல் பிரச்சனைதான்.காலையில் எழுந்தாலே மலம் கழிப்பதற்குள் உயிர் போய் உயிர் வரும்.டாக்டரைக் கேட்டதற்கு மலம் கழிப்பதற்கு முன் ஒரு ஆயின்மெண்டும் கழித்தபின் இன்னொரு ஆயின்மெண்டும் மலத்துவாரத்துக்குள் ந்ன்றாகப் போடச்சொன்னார்.பயனில்லை.நாளாக நாளாக ரத்தமும் அதிகமாக் வெளிப்பட ஆரம்பித்தது.அதற்குள் அடுத்த கீமோ ஊசி போடவேண்டிய நாளான டிசம்பர் 11ந் தேதியும் வந்து விட்டது.
அன்று டாக்டரைப் பார்த்ததும் உடல் வேதனையில் பேச முடியவில்லை.என்னைப் பரிசோதித்த டாக்டர்"தண்ணீரே குடிக்கிறதில்லே போலிருக்கு.அதனாலே தான் மலச்சிக்கலுடன் மலத்துவாரத்தில் தசைகளில்
இன்ஃபெக்சன் ஏற்பட்டு வீங்கியுள்ளது.இது பைல்ஸ் இல்லை."என்றார்.நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.தவறினால் மலச்சிக்கல் மற்றும் வீக்கம் குறையாதென்றும் யூரினில் தொற்றுநோய் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைய ஆரம்பித்துள்ளது என்றார்.புரோட்டின் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள் என்றார்.வலி குறைவதற்கு சில ஹோமியோபதி மருந்துகளை எழுதிக்கொடுத்தார்.அன்று மூன்று மணி நேரத்தில் வினோரல்பின்(2) கீமோ ஊசி போடப்பட்டது.

அடுத்த வாரம் முழுதும் இதே பிரச்சனை தொடர்ந்தது.கொஞ்சமும் குறையவில்லை.சித்தமருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளது என்பதைக் கேள்விப்பட்டு விசாரித்தேன்.அண்ணாநகர் மேற்கில் குடியிருக்கும் கிருஷ்ணகுமார் என்ற சித்த மருத்துவரைசந்தித்தேன்.அவர் சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர் மட்டுமல்ல,காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவத்துறைத் தலைவராகவும் பணீயாற்றுகிறார்.அவர் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டபின் வீக்கம் குறைந்தது.ரத்தம் வெளியேறுவது நின்றது.

இந்நிலையில் தலைமுடி கொட்ட ஆரம்பித்தது.காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது பார்த்தால் தலையணை பூராவும் நிறைய முடி விழுந்து ஒட்டியிருக்கும்.பார்த்தேன்.சலூனுக்குச் சென்று சவரம் செய்பவரை அழைத்துவரச் செய்து தலையை மொட்டை அடித்துக்கொண்டேன்.அக்கம் பக்கத்தவர்கள் கேட்டனர் என்னவென்று. திருப்பதிக்குச் சென்று மொட்டை போட்டுக் கொண்டதாகப் பொய் சொன்னேன். முன்னதாகவே வடபழனியில் உள்ள சினிமா நடிகர்களுக்கு விக் தயாரித்துக்கொடுக்கும் கடைக்குச் சென்று
நல்ல விக் ஒன்று தயாரித்து வாங்கிக்கொண்டேன்.இன்றைக்கு வரைக்கும் நான் வெளியே செல்லும்போது இந்த விக் மிகவும் உதவுகிறது.

அடுத்த வினோரல்பின்(3) கீமோ ஊசி டிசம்பர் 20ந் தேதி போடப்பட்டது.இரண்டாவது ஹெர்சப்டின் போடுவதற்காக சனவரி 2ந் தேதியன்று மருத்துவமனைக்கு வருமாறு சொன்னார்கள்.அதன்படியே சனவரி 2ந் தேதி சென்று அட்மிட் ஆனேன்.3ந் தேதி ஹெர்சப்டின்(2),4ந்தேதி டாஸிடாக்ஸ்ல்(2),5ந் தேதி வினோரல்பின்(4) போடப்பட்டது.ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அது மீண்டும் வளர்வதற்காக நியூகேன் என்ற ஊசி மருந்தை ஐந்து நாட்களுக்குத் தொடந்து போட்டுக் கொள்ளுமாறும் சொன்னார்கள்.அதையும் போட்டுக்கொண்டேன்.

கீமோவும் பழகிவிட்டது.அதன் பின்விளைவுகளும் பழகிவிட்டன.அவைகளுடன் போராடிப் போராடி நாட்களைக் கழிக்கவும் பழகிவிட்டேன்.பாதிப்புகள் குறைய வேண்டுமென்றால் நன்றாகச் சாப்பிட வேண்டும்.நிறையப் பழங்கள் உட்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.யூரின் இன்ஃபெக்சன் ஏற்பட்டு அதற்கான''ஆன்டிபயாடிக்" மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.


அடுத்துசனவரி 12ந் தேதி மருத்துவமனை சென்றேன்.அன்று வினோரல்பின் 5வது ஊசி போடவேண்டியது.எனக்கோ ஊசி போடுவதற்காக கையில் நரம்புகள் அவ்வளவாக அகப்படாது.ஊசி போடவந்த நர்ஸ் என்ன செய்தார் தெரியுமா?முதலில் வினோரல்பின் கீமோ மருந்தை சலைன் பாட்டிலில் ஏற்றிவிட்டு ஸ்டாண்டில் மாட்டி விட்டார்.பாட்டிலில் இருந்து டியூப் வழியாக கீமோ மருந்து கலந்த சலைன் வாட்டர் வந்துகொண்டிருக்கும்போது தான் கையில் ஊசி ஏற்றுவதற்காக நரம்பைத்தேடிக் குத்த ஆரம்பித்தார்.நரம்பு அகப்படவில்லை.அதே நேரத்தில் ஊசி வரை வந்திருந்த மருந்துத் துளிகள் கையில் பட்டும் ஊசி குத்திய இடங்களிலிருந்து வெளியேறவும் ஆரம்பித்தது.ஒரு வழியாக ஐந்தாவதுதடவை குத்தும் போது நரம்பு அகப்பட்டு ஊசியைக் குத்தினார் நர்ஸ்.அன்று வீட்டுக்கு வரும் போதே ஊசி குத்தின இடங்களில் எரிய ஆரம்பித்தது.இரு நாட்களில் லேசாகக் கருமையாக நிறம் மாறியது.

அடுத்த ஊசி போட்டுக்கொள்வதற்காக சனவரி 22ந் தேதி மருத்துவமனை சென்றேன்.ஊசி போட்டிருந்த இடத்தில் சீழ் உண்டாகி பெரிய வீக்கமாக மாறியிருந்தது. இதைப்பார்த்ததும் டாக்டரின் முகம் மாறியது.மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.என்னவென்று நான் விவரித்தேன்.உடனே சீழ் பிடித்த இடத்தைத் துடைத்து விட்டார்.முழுதம் துடைத்தபின் பார்த்தால் ஆழமாக ஒரு பள்ளம் ஏற்பட்டு வெள்ளையாகத் தெரிந்தது. நன்றாகச் சுத்தம் செய்தபின் ஜெல் மருந்தைத் தடவி பிளாஸ்திரி போட்டார். ரீஜென்-டி என்ற அந்த ஜெல் ஆயின்மெண்டைப் புதிதாக வாங்கி இரு நாளுக்கு ஒருமுறை போடுமாறு சொன்னார்.அன்று வினோரல்பின் ஊசி(6)போடப்பட்டது.

கீமோ போடும் முறை அதுவல்ல என்றும்,கீமோ மருந்துகள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தவை என்றும் சிலவகையான கீமோ மருந்துகள் தப்பித் தவறிக் கையில் பட்டாலே கையை வெட்டிவிடவேண்டி வரும் என்றும் கூறினார்.அந்த நர்சைக் கூப்பிட்டு நன்றாகக் கண்டிக்க வேண்டும் என்று தோன்றியது.ஆனால் முடியவில்லை.ஏனென்றால்
அன்று தான் அந்த நர்ஸ் வேலையை ராஜினமா செய்து கொண்டிருந்தார்.மருத்துவமனையில் அவருக்கு அன்று தான் கடைசிப் பணி புரியும் நாள்.விரைவில்திருமணம் செய்யவிருப்பதாகவும்,திருமணத்திற்குப் பின் பாண்டிச்சேரி சென்று புதுவாழ்வை தொடங்கவிருப்பதாகவும் சொன்னார்.நிறைந்த மனதுடன் வாழ்த்தினேன்.என் விதி இப்படிப் புண் ஆக வேண்டும் என்று இருக்கிறது.


அடுத்துவந்த இடைவெளிகளில் வரிசையாகக் கீமோ ஊசிகள் போடப்பட்டன.நோய்களுடனும்,அதற்கான சிகிச்சை முறைகளுடனும் நன்றாகப் பழகிவிட்டதால் பெரிய மாறுதல் இல்லை.

31.01.2007 வினோரல்பின்(7)

12.02.2007 ஹெர்சப்டின் (3)
13.02.2007 டாஸிடாக்ஸல்(3)
14.02.2007 வினோரல்பின்(8)

14.03.2007 ஹெர்சப்டின் (4)
15.03.2007 டாஸிடாக்ஸல்(4)

16ந் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு வெள்ளை அணுக்கள் வளர்வதற்காக
நியூகேன் என்ற ஊசிமருந்து ஐந்து நாளைக்குப் போட்டுக்கொண்டேன்.

பின்பு ஏப்ரல் மாதம் 17ந் தேதியன்று மருத்துவமனை சென்றோம்.யூரின் இன்ஃபெக்சன் அதிகமாக உள்ளதாகவும் புரோட்டின் மிகவும் குறைந்திருப்பதாகவும் டாக்டர் சொன்னார்.இவைகளைச் சரி செய்வதற்காக மருந்துகள் எழுதிக் கொடுத்தார்.இன்னும் நான்கு முறை கீமோ ஊசி மருந்து போடவேண்டும் என்றும் மே மாதம் 4ம் தேதி வருமாறும் சொன்னார்.

8 comments:

வடுவூர் குமார் said...

நோயுடன் தான் போராட வேண்டும் என்று பார்த்தால்,நர்ஸோடு கூடவா??

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அந்த நர்சை வாழ்த்தி வழியனுப்பிய
தங்கள் பண்பு,( இந்த நிலையிலும்) போற்றுதற்குரியது.

அனுராதா said...

வாங்க வடுவூர் குமார்,யோகன் பாரீஸ்.நன்றி

seethag said...

திரும்ப திரும்ப ஊசி போடும்போது சிலனேரங்களில் நரம்புகிடைக்காது தான். ஆனால் கீமோ கொடுக்கும்போது நல்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்களை பயன்படுத்த வேண்டும்.

எப்படியோகடந்துவிட்டீர்கள்.
good to see you keeping you chinup in all difficulties

அனுராதா said...

சரியாகச்சொன்னீர்கள் சீதா.

seethag said...

www.highwaysbeyondcancer.org

anuradha,
this is the indian doctors blog i found out by googling.

cheena (சீனா) said...

அனுபவம் இல்லா செவிலியர்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று துன்பத்தை அதிகரிக்கிறார்கள். வாழ்த்தி வழி யனுப்பிய தங்களின் நல்ல உள்ளம் வாழ்க.

அனுராதா said...

வாங்க சீதா.இது பிளாக் இல்லை.இணைய தளம்.ஏற்கன்வே பார்த்துவிட்டேன்.நன்றி.

வாங்க சீனா.பெரும்பாலான நர்சுகள் சாதாரண ஊசி போடுவதற்கும் கீமோ போன்ற விஷத்தன்மை உள்ளஊசிகளைப் போடுவதற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாமலேயே இருக்கின்றனர்.