Tuesday, March 25, 2008

விழிப்புணர்ச்சி ஏற்படுத்த என்ன செய்யலாம்?ஆலோசனை கூறுங்கள்.

வலைப்பதிவு தொடங்கி ஒன்பது மாதங்களாகிவிட்டன.கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் கால கட்டத்தில் மனதளவிலும் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.ஒரு கால கட்டத்தில் நான் விரும்பிப் படிக்கும் தினசரி,வார மாத இதழ்கள் எதிலுமே நாட்டம் செல்லவில்லை.இப்படியே தொடர விட்டால் மனநோய்க்கு ஆளாகிவிடுவேனோ என்ற பயம்வந்து விட்டது.

இந்நிலையிலிருந்து மீண்டு வர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன்.சரி,அபார்ட்மென்டில் உள்ளவர்களுடன் பழகலாம் என்றாலோ எனக்கு இந்தநோய் வந்திருப்பதை நான் யாரிடமும் சொல்லவில்லையே,அப்புறம் எப்படி அடுத்தவர்களுடன் பழகுவது?எனவே அதற்கும் வழியில்லை.நல்ல வேளை!என் கணவர் வாலன்டரி ரிட்டயர்மென்ட் வாங்கியிருந்தார்.என்னைக் கவனித்துக் கொள்வதிலும் மருந்துகளை நேரம் தவறாது எடுத்துக் கொடுப்பதிலும் வார இதழ்கள்,புத்தகங்களில் உள்ள சுவையானதகவல்களை எனக்குப் படித்துக் காண்பிப்பதிலும் இருந்தார்.எனக்கு நீ.உனக்கு நான் பொருத்தமானஜோடி.என்றிருந்தோம்.என் மன ஓட்டங்களை நன்றகாவே அறிந்தவர்.இந்த நேரத்தில் அவர் சமையலும் கற்றுக் கொண்டார்.கிச்சனில் என்ன செய்வாரோ என்று பயந்துகொண்டே சமையல் கற்றுக் கொடுத்தேன்.சுருக்கமாகச் சொன்னால் என் தனிமையைப் போக்க என்னால் ஆனதெல்லாம்நான் செய்தேன்.அவரால் ஆனதெல்லாம் அவர் செய்தார்.

ஒரு காலகட்டத்தில் எனது சிந்தனைகள் மாற ஆரம்பித்தன.இந்நோய் குறித்தன பல புத்தகங்களைப் படித்தோம்.இன்டர்நெட்டில் தேடி ஏராளமான தகவல்களைச்சேகரித்தோம்.இந்நோய் குறித்தான எங்கள்பொது அறிவு சற்று விசாலமானது.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில நபர்களையும் சந்தித்தோம்.இவற்றின் விளைவாக என்மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேண்டிய உதவிகள்செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகத் தோன்ற ஆரம்பித்தது.கையில் பணமில்லாத காரணத்தால் மாத்திரை வாங்க முடியாமல் அவதிப்பட்ட சிலபேர்களுக்கு மூன்று நான்கு மாதங்கள் வரை மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தேன்.ஆனால் எதையும் தொடர்ச்சியாகச் செயல்படுத்த முடியவில்லை.நோய்,நோய்க்கான சிகிச்சை,அதன் பலனான பக்கவிளைவுகள்,உடலில் ஏற்படும் ரணங்கள்,பாதிப்பிலிருந்து மீளுதல்,பின்னர் மீண்டும் நோயின் தொடர்ச்சி என ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன.எனவே எனது எண்ணத்தைத் தொடர்ச்சியாக இன்றுவரை நிறைவேற்ற முடியவில்லை.

இவ்வளவுக்கும் இடையில் மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தோம்.இதில் கூறியுள்ள தகவல்கள் இளைய தலைமுறையினரை எந்த அளவுக்குப் பாதித்துள்ளன என்பதற்கு இன்றுவரை வந்துள்ள பின்னூட்டங்களே சாட்சி.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக சங்கமம் இணைய இதழ் சார்பில் முல்லை என்ற தலைப்பில் 2007ம் ஆண்டிற்கான சிறந்த வலைப்பூவாக எனது பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டது.இத் தேர்வானது மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் எனது முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் ஒப்புதலாகவே கருதுகிறேன்.

எனது இம்முயற்சியானது இப்பதிவை எழுதுவதுடன் முடிந்துபோய் விடவில்லை.இதையே ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டது.

இப்பொருள் குறித்து எனது டாக்டரிடம் விவாதித்தோம்.அவர் அரிய தகவல்களுடன் புது செய்தியும் சொன்னார்."இந்த நோய் குறித்து நாங்கள் பொதுமக்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.புற்றுநோய் வருவதைக் கடவுள் தங்களுக்கு இட்ட சாபமாகக் கருதுகின்றனர்.இதையே உங்கள் மாதிரியான நபர்கள் எடுத்துச் சொன்னால் அதே மக்களில் 30 முதல் 40 சதவிகிதம் பேர் சீரியசாக எடுத்துக் கொள்கின்றனர்.எனவே நீங்கள் புத்தகம் போடுவதுதான் சிறந்தது.அதே வேளையில் உங்கள் வலைப்பதிவை அப்படியே போடச் சொல்லவில்லை."என்றார்.

இது தொடர்பாக ''BREAST FRIEND''(மார்பகத் தோழி)என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னார்.

தனக்குப் புற்றுநோய் வந்துவிட்டது என்பது மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம்.மார்பகப் புற்றுநோய் பல வகைப்படும்.பல ஸ்டேஜில் இருக்கும்.HER 2-positive போன்ற வகையில் வரும் புற்றுநோய் மற்றவகைப் புற்றுநோய் வகைகளை விட மிக வேகமாக வளரும்.எனவே சரியான டெஸ்டுகளை விரைவில் எடுத்து சிகிச்சைகளை மேற்கொண்டால்தான் நோயாளியின்உயிரைக் காப்பாற்றவும் முடியும். டாக்டர் இந்நோய் பற்றி பல சிக்கலான தகவல்களைச்சொல்வார்.புரியாத சிகிச்சை முறைகளை விவரிப்பார்.அதனை நோயாளி மட்டுமே தனி ஒரு ஆளாக எதிர் கொள்வது சிரமம்.மனதளவில் தயாராக இருக்கவும் வாய்ப்பில்லை.இந்தநேரத்தில் சரியான ஆலோசனை சொல்ல நம்பகமான ஒருவர் கண்டிப்பாகத் தேவை.இதற்குத் தனது குடும்பத்தில் ஒருவரைத் துணைக்கு அழைத்துச் செல்லலாம்.அப்படி யாரும் இல்லையென்றால் தனது நெருங்கிய தோழி ஒருவரைத் துணைக்கு வைத்துக் கொள்ளலாம்.நோயாளி டாக்டரைக் கலந்து ஆலோசிக்கும்போது அவரும் கூடவே இருக்க வேண்டும்.என்ன சந்தேகம் வந்தாலும் கொஞ்சம் கூடத் தயங்காமல் டாக்டரிடம் கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். டாக்டர் கூறும் பல தகவல்களை வைத்துகொண்டு நோயாளியிடம் விரிவாகப் பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கச் செய்வதில் உதவ வேண்டும்.இந்தத் தோழியானவர் இந்நோய் தொடர்பான பல்வேறு தகவல்களையும் திரட்டி நோயாளியிடமும் அவரின் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் பகிர்ந்துகொண்டு சரியான முடிவுகள் எடுப்பதற்குத் துணையாக நிற்க வேண்டும். இவ்வகையில் நோயாளிக்குஅனைத்து வகையிலும் உதவியாக இருக்கும் ஒருவரை அவரின் மார்பகத் தோழி என அழைப்பது பொருத்தமானது தானே!

இதன் அடிப்படையில் மேற்கண்ட புத்தகமானது பதினேழு நாடுகளிலிருந்து சில நோயாளிகளையும் மற்றும் அவரது மார்பகத் தோழிகளையும் பேட்டி கண்டு இந்த மார்பகப் புற்றுநோய் தொடர்பாக மக்களுக்குத் தெரிவிக்கும் செய்திகளையும் புகைப் படங்களுடன் மிக அழகாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால்..........இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் கேள்விகள் கேட்பதை டாக்டர்கள் கொஞ்சம் கூட விரும்புவதில்லை.நீ என்ன கேள்வி கேட்பது?உனக்கு என்ன தெரியும்?கேன்சர் நோய்க்கு நான் படிச்சுட்டு வந்திருக்கேனா? நீ படிச்சுட்டு வந்திருக்கியா?என்றெல்லாம் பேசிவிடுகிறார்கள்."இந்தா பாரும்மா. இந்த நோய் உனக்கு வந்திருக்கு.இதுக்கு இது தான் டிரீட்மெண்ட்.இஷ்டமிருந்தா டிரீட்மெண்ட் எடுத்துக்கோ.இல்லேன்னா உன் இஷ்டம்.நீ போகலாம்.கேள்வியெக் கேட்டு என் வேலையெக் கெடுக்காதே!"இப்படியெல்லாம் ஒரு டாக்டர் பேசினால் நோயாளியோ அவரது மார்பகத் தோழியோ என்ன செய்வார்?

அதே நேரத்தில் மேற்கண்ட புத்தகத்தில் தெரிவித்தபடியே இந்தியாவிலும்சிகிச்சைமுறை வர வேண்டும். அதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ வேண்டும்இதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.

போன ஆகஸ்டு மாதத்தில் லண்டனிலிருந்து என் தாய்மாமா மகன் வந்திருந்தார்.அவர் அங்கேயே எலும்பு அறுவை சிகிச்சைக்கான எம்.எஸ்.மேல்படிப்பு படித்துவிட்டு அங்கேயே டாக்டராகப் பணிபுரிகிறார்.அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இதைப் பற்றிக் கேட்டேன்.இந்தியாவில் கிட்டத் தட்ட அனைத்து மருத்துவமனைகளிலுமே டாக்டர்கள் இப்படித்தான் சிகிச்சை கொடுக்கிறார்களாம்.இதற்கு AUTHORITATIVE TREATMENT என்று சொல்வார்களாம்.மேல்நாடுகளில்அவ்வாறு இருக்காதாம்.ரொம்பவும் இன்ஃபார்மேடிவாக இருக்குமாம்.

எனவே இந்த வகையில் புத்தகம் தயாரிப்பது அவ்வளவு புத்திசாலித்தனமாகப்படவில்லை.மாறாக,இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று முடித்தவர்களையும்,சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களையும் அவர்களின் நெருங்கிய உறவினர்களிடமும் பேட்டி காணலாம்.அவர்கள் அனுபவங்களைத் தொகுத்து ஒரு ஆய்வு அறிக்கை தயாரிக்க வேண்டும்.இதன் பேரில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தையும் தொண்டு நிறுவனங்களையும் அணுக வேண்டும்.

வேறென்ன செய்யலாம்?ஆலோசனை கூறுங்கள்.என் கணவர் அடிக்கடி ஒரு மேற்கோள் கூறுவார்."நன்றாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயல் பாதி முடிந்த மாதிரி"என்று

என்வே உங்களில் ஒருத்தியாக என்னை ஏற்றுக்கொண்டு நான் என்ன செய்யலாம் என்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தயவு செய்து கூறுங்கள்.

எனது அடுத்த செயலுக்கு அஸ்திவாரமே நீங்கள் கூறவிருக்கும் ஆலோசனை

2 comments:

cheena (சீனா) said...

சகோதரி,,

என்ன கூறுவது என்பது தெரியவில்லை. 9 தினக்களாகியும் ஒரு மறுமொழியும் வரவில்லை. பொருள் என்ன ஆலோசனை சொல்வது என்பது புரியாத காரணத்தினால் தான். இத்துறையைச் சார்ந்த மருத்துவ வல்லுனர்களின் புரிந்துணர்வே வேறு. தங்களின் நோக்கமே வேறு. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தான் தக்க ஆலோசனைகள் கூற முடியும். பார்ப்போம். இறையருளால் முயற்சி வெற்றி பெறும். நல்வாழ்த்துகள்.

அனுராதா said...

வாருங்கள் சீனா.ஆக்க்கபூர்வமான ஆலோசனை சொல்வதென்றால்,மிகவும்யோசித்துத் தான் சொல்லவேண்டும்.தாமதமானாலும் பரவாயில்லை.எப்போது வேண்டுமானலும் சொல்லுங்கள்.நன்றி.