2004 பிப்ரவரி மாத முடிவில் மார்பகத்தில் ஏற்பட்டிருந்த் புண்கள் ஏறத்தாழ முழுதும் ஆறி விட்டன.ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பொக்கு உதிராமல் இருந்தன.அரிப்பு தாங்க மாட்டாமல் லேசாகச் சொரிந்தாலே மீண்டும் ரணமாகிவிடும்.
2004 மார்ச் 2ந் தேதி அடுத்த செக்ககப்பிற்காக மருத்துவமனை சென்றேன்.வரிசையாக டெஸ்டுகள் எழுதிக் கொடுக்கப்பட்டன.பிளட் டெஸ்டிலேயே பல வகை,ஈ.சி.ஜி.,எக்ஸ்ரே,எக்கோ,அல்ட்ரா சவுண்டு,சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன்,நியூக்ளியர் ஸ்கேன் ஆகியவை எடுக்கப்பட்டன.5.3.2004 அன்று அனைத்து ரிசல்டுகளுடன் டாக்டரைப் பார்த்தோம்.ரிசல்ட் நன்றாக வந்திருப்பதாக டாக்டர் சொன்னார்.
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அப்பாடா!பட்ட துயரம் போதும்.இனிமேல் ஒரு பிரச்சனையுமில்லை.மற்ற பெண்களைப் போலவே உடலளவில் நானும் சாதாரண மனுஷியாகிவிட்டேன்.
டாக்டரிடம் என் சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன்.
"எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை டாக்டர்.ரொம்ப தாங்ஸ் டாக்டர்."
"எனக்கென்னம்மா நன்றி.எல்லாம் அந்த இறைவனுக்குச் சொல்லுங்கள்."
"சரி சார்."
டாக்டர் மெள்ள ஆரம்பித்தார்."இதுவரை எல்லாம் ஓகே.இன்னும் ஒரு சின்ன
சிகிச்சை இருக்கிறது.அதைச் செய்துவிட்டால் போதும்."
நான் திடுக்கிட்டேன்.
"என்ன சார் சொல்றீங்க?இன்னும் ஒண்ணா?''
''ஆமா அனுராதா.இப்போ மார்பிலே இருந்த கேன்சர் செல்களையெல்லாம் அழிச்சாச்சில்லே?ஆனாலும் மார்பிலேயே கொஞ்சம் கேன்சர் செல்கள்
இவ்வளவு ரேடியேஷனுக்குப் பின்னாலும் உயிரோடு இருக்கும்.இருக்க அதிக
வாய்ப்புண்டு. அதனாலே பிராக்கிதைரபி என்ற ஒரு சிகிச்சை அவசியம்
செய்ய வேண்டும்.அதாவது உங்க வலது மார்பகத்தில் ரொம்பவும் மெலிதான ஊசிகளை இடது பக்கத்திலேருந்து குத்தி வலது பக்கம் வெளியே வருமாறு
குத்தி வைப்போம்.ஒவ்வொரு ஊசியிலேயும் இரிடியம் கம்பிகளைச் சொருகுவோம்.அந்தக் கம்பிகள் வழியே கதிரியக்கம் மார்பகத்துக்குள் சென்று
மிச்சம் மீதி இருக்கிற கேன்சர் செல்கள் எல்லாத்தையும் அழிச்சுடும்.''
எனக்குப் புரிந்த மாதிரி இருந்தது."ஏன் சார்.பழனிகோயில்லே நாக்கிலே அலகு குத்திகிட்டு பக்தர்கள் வருவாங்களே,அந்த மாதிரி சொல்றீங்களா?
''கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க அனுராதா.அதே மாதிரி தான்''
"ஏன் சார்.இது தேவையா?"
"கண்டிப்பாத் தேவை அனுராதா."
எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
என் கணவர் என்னைச் சமாதானப்படுத்தினார்."டாக்டர் ந்ம்ம நல்லதுக்குத் தானே சொல்றாரு.இவ்வளவு பெரிய ரேடியேசன் பாதிப்பையே
தாங்கிகிட்டே.இதையும் செஞ்சிக்கிறது நல்லதுன்னு தான் தோணுது."
வேறு யாரைக் கேட்பது?ஒரு பக்கம் டாக்டர். ஒரு பக்கம் என் கணவர்.
இரண்டு பேருமே என் நல்லதுக்குத் தான் சொல்றாங்க.சரி ஒத்துக் கொள்வோமே!
"சரி சார்.செஞ்சுக்கிற்றேன்."
"ஓகே அனுராதா.இந்த பிராக்கிதைரபி இங்கே செய்யறதில்லே.நந்தம்பாக்கத்தில் இருக்கிற செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஆஸ்பத்திரியில் தான் செய்து வருகிறோம்.நீங்க வர்ர 12ந்தேதி அந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிடுங்க.மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்"என்று கூறி டாக்டர் எங்களுக்கு விடை கொடுத்தார்.
Showing posts with label மார்பகப் புற்றுநோய் பகுதி 11. Show all posts
Showing posts with label மார்பகப் புற்றுநோய் பகுதி 11. Show all posts
Monday, October 15, 2007
Subscribe to:
Posts (Atom)