"இன்னும் என்ன சார் ஆபரேசன்.அது வேண்டாமின்னு தானே எல்லா ஆஸ்பத்திரிகளையும் விட்டு விட்டு இங்கே வந்தேன்.இவ்வளவு கொடுமைகளையும் தாங்கினதுக்கப்புறம் இன்னும் என்ன சார்?"
''வேண்டாமென்றீங்களா?இப்ப நான் சொல்ற ஆபரேசன் மார்பகத்தில் செய்யப் போறதில்லே.மார்பகத்தை எடுக்கப் போறதும் இல்லே.''
வெறுமனே டாக்டரைப் பார்த்தவாறே இருந்தேன்.
நிண நீர் சுரப்பி அப்படின்னு கேள்விப் பட்டிருக்கீங்களா?ஆங்கிலத்தில் லிம்ப் நோட்ஸ்ன்னு சொல்வோம்.நம்ம உடம்பிலே ரத்தம் ஓடுதில்லே.அதிலெ கலந்திருக்கும் கழிவுகளையும்,பேக்டீரியா,வைரஸ் கிருமிகளையும் வடிகட்டும் வேலையை இந்த சுரப்பிகள் செய்கின்றன.ஒவ்வொருத்தரோட உடம்பில் சுமார் 500 முதல் 600 வரை இந்த நிணநீர் சுரப்பிகள் இருக்கும்.இப்போ உங்க வலது மார்பகத்தில் ஓடும் ரத்தத்தை வடிகட்டும் நிணநீர் சுரப்பிகள் மார்பகத்திலேருந்து
வலது கை அக்குளில் இருக்கும் கிளான்ஸுகளில் முடியும்.அந்த கிளான்ஸுகளைத் தான் ஆபரேசன் செய்து எடுக்க வேண்டும். மார்பகத்தில் இன்னும் மிச்சம் மீதி இருக்கிற கேன்சர் செல்கள் இந்த நிணநீர் சுரப்பிகள் வழியே போனால் உடம்பில் மற்ற பாகங்களில் பரவ வாய்ப்புண்டு.எனவே இந்த கிளான்ஸுகளை ஒரு சின்ன ஆபரேசன் செஞ்சி எடுத்திட்டா
மார்பகத்தில் தப்பித்தவறி இருக்கிற கேன்சர் செல்கள் மார்பகத்தை விட்டு வெளியேற முடியாது.இத்னாலே உடம்பில் வேறு உறுப்புகளுக்குமார்பகத்திலேருந்து கேன்சர் பரவுவது தடுக்கப்படும்.''
என்னவோ பாதி புரிந்த மாதிரியும் பாதி புரியாத மாதிரியும் இருந்தது.
" என்ன சொல்றீங்க அனுராதா?"
"சொல்றதுக்கு என்ன இருக்கு சார்.என்னை என்னமோ பண்ணனும்னு முடிவு பண்ணிட்டிங்க''.
இந்த ஆபரேசன் செஞ்சபிறகு எடுக்கப்படும் நிணநீர் சுரப்பி கிளான்சுகளை
பயாப்ஸி செய்து பார்த்தா அதுலே கேன்சர் செல்கள் பரவியிருக்கான்னு தெரிஞ்சிரும்.இந்த ஆபரேசன் அவசியம் செஞ்சால் ஒழிய ரேடியேசன் கொடுத்த நோக்கம் பூர்த்தியாகாது.ஸோ இந்த ஆபரேசன் அவசியம் செஞ்சாகணும்.''
''ஒரு வழியா என்னை எலியாக்கிட்டீங்க சார்.''
என்னது?
பெரிய பெரிய விஞ்ஞானிகளெல்லாம் பரிசோதனைக் கூடத்திலே எலிகளை வச்சு ஆராய்ச்சி பண்ணுறதை டி.வி.யிலே பாத்திருக்கேன்.அந்த மாதிரி என்னையும் வச்சுப் பரிசோதனை பண்றீங்க.''
டாக்டர் சிரித்தார்.
''என்னால் சிரிக்க முடியாது டாக்டர்.''
''ஏன்?'
''நோவு எனக்குத் தானே?''
பிறகு கேட்டேன்.''இத்தோட முடிஞ்சுருமா.இன்னும் இருக்கா?''
''அவ்வளவே தான் அனுராதா.ஆபரேசனுக்கப்புறம் ஒரு ஐந்து நாள் மட்டும்
அக்குளில் ஒரு டியூபைச் சொருகி வைப்போம்.வழக்கமா சுரக்கும் நிணநீரெல்லாம் டியூப் வழியா வெளியேறும்.ஐந்து நாளைக்குள் சுரப்பது நின்று விடும்.அதுக்கப்புறம் டியூபை எடுத்திடலாம்.''
அப்போது உள்ளே வந்த இன்னொரு டாக்டரை அறிமுகப்படுத்தினார்.
"இவர் தான் டாக்டர் பிரசாத். இந்த ஆபரேசன் செய்யப் போகிற சர்ஜன்."
அவருக்கு வணக்கம் தெரிவித்தேன்.
அவருடன் ஆலோசனை செய்தபிறகு செப்டம்பர் மாதம் 12ந் தேதி ஆபரேசன் செய்வது என்று முடிவானது.
Showing posts with label மார்பகப் புற்றுநோய் பகுதி 13. Show all posts
Showing posts with label மார்பகப் புற்றுநோய் பகுதி 13. Show all posts
Tuesday, October 16, 2007
Subscribe to:
Posts (Atom)