Showing posts with label மார்பகப் புற்றுநோய் பகுதி 25. Show all posts
Showing posts with label மார்பகப் புற்றுநோய் பகுதி 25. Show all posts

Friday, October 26, 2007

ஒரு வேண்டுகோளும் மார்பகப் புற்றுநோய்க்கான எச்சரிக்கையும்.

மார்பகப் புற்று நோய் என்னைத் தாக்கியதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்துச் சம்பவங்களையும்,எனக்குக்கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகளையும்,நான் பெற்ற அனுபவங்களையும் எனக்குத் தெரிந்த நடையில் சொல்லிவிட்டேன்.

புற்றுநோய் வந்துள்ள மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டும் என்று பல டாக்டர்கள் வலியுறுத்தியபோது நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.அதற்கான காரணங்களை ஏற்கனவே விவரமாகச் சொல்லியிருக்கிறேன்.அவையே எல்லோருக்கும் பொருந்தும் என்று எடுத்துக்கோள்ளக்கூடாது.ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கும்.எனக்கு மார்பகம் அகற்றாமல் இருப்பதுதான் சரி என்று அப்போது பட்டது."இவ்வளவு கஷ்டப்படும்பொழுது முதலிலேயே மார்பக அறுவை சிகிச்சையே செஞ்சிருக்கலாமேன்னு தோணினது உண்டா?இப்பொழுது நடந்தவைகளை மாற்றமுடியும் என இருந்தால் உங்களின் முடிவு மாறுமா? என்று இலவசக்கொத்தனார் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.சரியான கேள்வி.

எனக்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.படும் துன்பங்களுக்கு இடையில் முதலிலேயே அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டிருக்கலாமோ என்று சில நேரம் தோன்றியது உண்டு.ஆனால் நான் சந்தித்த மார்பகப் புற்றுநோயாளிகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அனைவருக்குமே ரேடியேசன் கொடுக்கப்பட்டுள்ளது.கீமோதைரபி கொடுக்கப்பட்டுள்ளது.அப்போதெல்லாம் 'அறுவைசிகிச்சை செய்தும் இவர்களுக்கும் ரேடியேசன் மற்றும் கீமோ கொடுக்கப்படுகிறதே!நல்லவேளை. அறுவை சிகிச்சையிலிருந்து நான் தப்பித்தேன்.' என்று நினைப்பதும் உண்டு.

இப்பொழுது நடந்தவைகளை மாற்றமுடியும் என இருந்தால் உங்களின் முடிவு மாறுமா?

கேள்வியை இப்படி மாற்றிப் போட்டுக்கொள்கிறேன்.மீண்டும் இதே மார்பகத்திலோ அல்லது இடது மார்பகத்திலோ இந்நோய் வந்தால்,அறுவைசிகிச்சைக்கு ஒப்புக்கொள்வீர்களா?

எனது பதில்:அது அந்த நேரத்தில் நிலவும் சூழ்நிலையையும்,என் மனப்பக்குவத்தையும் பொறுத்தது.அந்த முடிவை அந்த நேரத்தில் தான் எடுக்கமுடியும்.உலகில் மாறாதது எதுவுமே இல்லை.மாற்றம் என்பதைத் தவிர.

கேன்சரைப் பொறுத்தவரைக்கும் இப்போதைய அவசிய அவசரத் தேவை
1.மருத்துவ உலகில் இன்னும் புதிய கண்டுபிடிப்புகள்
2.சமுதாயத்தில் அனைவருக்கும் இந்நோய் குறித்தான விழிப்புணர்வு.

கேன்சர் நோய் வருவதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மருத்துவம் முன்னேறிய பிறகு மார்பகப் புற்றுநோய் வந்த நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள்,அவர்களின் வாழ்க்கைமுறைகள் போன்ற விபரங்களைப் புள்ளிவிபரங்களாகத் தொகுத்துக் கணக்கிட்டுப் பார்த்ததில் சில உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அவை என்ன?

1.பெண்ணாக இருப்பதுவே மார்பகப் புற்றுநோய் வர முதல் காரணம்.
2.பெண்கள் வயது ஆக ஆக இந்நோய் வர வாய்ப்பு கூடுகிறது.நாற்பத்துஐந்து வயதுக்கும் கீழே உள்ள பெண்களுக்கு எட்டுக்கு ஒன்று என்ற விகிதத்திலும்
ஐம்பத்துஐந்து வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயது ஆனவர்களுக்கு
மூன்றில் இரண்டு என்ற விகிதத்திலும் இந்நோய் காணப்படுகிறது.
3.பரம்பரையாக இந்த நோய் வந்தது என்று கண்டறியப்பட்ட நோயாளிகள் ஐந்திலிருந்து பத்து சதவிகிதம் பேர்.
4.உங்கள் தாயாருக்கோ,சகோதரிக்கோ,மகளுக்கோ இந்நோய் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்நோய் வ்ருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு ஆகிறது.இவ்வாறு மிகநெருங்கிய உறவினர்கள் இரண்டு பேர்களுக்கு இருந்தாலோ உங்களுக்கு வரும் வாய்ப்பு ஐந்து மடங்கு ஆகிறது.
5.மார்பகப் புற்றுநோய் உள்ள ஒரு பெண்ணுக்கு அதே மார்பகத்தில் வேறு பாகத்திலோ அல்லது மற்றொரு மார்பகத்திலோ புதிய புற்று நோய் தோன்றக்கூடிய அபாயம் மூன்றிலிருந்து நான்கு மடங்காகும்.
6.பனிரெண்டுவயதுக்குள் வயதுக்கு வந்தவர்களுக்கும்,ஐம்பத்துஐந்து வயதுக்கு மேல் மெனோபாஸ் அடைந்தவர்களுக்கும் இந்நோய் வரலாம்.
7.குழந்தை பெறாத பெண்கள்,முப்பது வயதுக்கு மேல் முதல் குழந்தை பெறும் பெண்கள் ஆகியோருக்கும் வரலாம்.
8.கருத்தடை மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்களுக்கும் வரலாம்.
9குழந்தை பெற்ற தாய்கள் குறைந்தது ஒன்றரை வயது முதல் இரண்டு வயது வரையிலாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தால் இந்நோய் வரக்கூடிய வாய்ப்பு குறைகிறது.
10.ஆல்கஹால் உபயோகிக்கும் பெண்களுக்கு இந்நோய் வரக்கூடிய அபாயம் உண்டு.
11.அதிக எடையுள்ள பெண்களுக்கும் இந்நோய் வரலாம்.மெனோபாஸ் வந்த குண்டானபெண்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம்.
12.நைட் ஷிஃப்ட் பார்க்கும் பெண்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் உண்டு என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.வெளிச்சத்தின் காரணமாக ''மெலடோனின்''என்ற ஹார்மோன் பாதிக்கப்படுவது தான் காரணம் என்கிறார்கள்.

இவ்வாறாக ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.மனித குலத்தின் நன்மைக்காக இவர்களின் தொண்டு மகத்தானது.

அடுத்ததாக சமுதாயத்தில் அனைவருக்கும் இந்நோய் குறித்தான விழிப்புணர்வுக்கு வருகிறேன்.

எத்தனை பேர்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்பு உணர்வு இருக்கிறது?இந்த நோய் என்னைத் தாக்கும் வரை எனக்கே விழிப்புணர்வு இல்லையே.எங்கே போய் முட்டிக்கொள்வது?

இதற்கு அரசு தான் போதிய பிரச்சாரம் செய்ய வேண்டும்.இதை மிகச் சுலபமாகச் செய்யலாம்.தமிழ்நாட்டில் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு துணைக் கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் நடக்கிறது.மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்திலும் ,கலெக்டர் தலைமையில் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இன்னொரு கிராமத்திலும் மனுநீதி நாள் நடக்கிறது.அரசின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகள் அவைகளில் பங்கேற்று மக்கள் குறைகளைத் தீர்த்து வைக்கிறார்கள்.கலெக்டர் தலைமையில் நடக்கும் மனுநீதிநாளில் மாவட்ட அளவிலான சுகாதாரத் துறை அதிகாரிகளும் டாக்டர்களும் பங்கேற்கிறார்கள்.புற்றுநோய்க்கான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை இங்கேயே ஆரம்பிக்கலாமே!


இதைச் செய்யும்போது அனைத்துப் பெண்களும் மருத்துவக்காப்பீடு செய்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.அந்தக் காப்பீட்டில் அடங்கும் நோய்களுக்கான பட்டியலில் கேன்சர் நோயும் இருக்குமாறு உறுதி செய்ய வேண்டும்.மிக மிக அதிகமான செலவு பிடிக்கும் கொடுமையான நோய் இந்த நோய்.

சரி.அரசும் அதிகாரிகளும் பிரச்சாரம்தான் செய்யமுடியும்.மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும்.

எனவே எனது வேண்டுகோளை சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் தனித்தனியாக வைக்கிறேன்.
முதலில் மார்பகப் புற்றுநோய் வந்த பெண்களுக்கு.

ஐயையோ,இவ்வளவு கொடிய நோய் வந்து விட்டதே என்று மனம் கலங்காதீர்கள்.இதற்கான முதல் சிகிச்சையே மனதைத் திடமாக்கிக்கொண்டு வந்ததை எதிர்கொள்வதுதான்.பிரச்சனைகள் எதுவானாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.துவண்டுவிடுவதால் எதுவும் ஆகப் போவதில்லை.
நோயும் கொடுமையானதுதான்.அதற்கான சிகிச்சைமுறைகளும் கொடுமையானவை தான்.அனைத்து சிகிச்சைகளும் உங்கள் நலனை முன்னிட்டே செய்யப்படுகின்றன என்பதை மறவாதீர்கள்.இதைத் தவிர வேறு எதுவும் நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் கணவர்களுக்கு,

பெற்றோர்,சகோதர சகோதரிகள்,சொந்தங்கள் என அனைத்தையும் திருமணமான ஒரே நாளில் விட்டுவிட்டு உங்களுடன் வந்தவள்,உங்கள் சுகத்திலும் துக்கத்திலும் பங்கு பெற வந்தவள்,
இவ்வளவு காலம் நீங்கள் சாய்ந்துகொள்ளத் தோள் கொடுத்தவள்,நீங்கள்நோயில் படுத்த படுக்கையில் விழும்போது இரவும் பகலும் உங்களைக் கவனித்துக்கொண்டவள்.அவளுக்கு இந்தநோய் வந்திருக்கிறது.ஆணோ,பெண்ணோ ஒருவருக்கு ஒரு நோய் வருவதற்குக் காரணமே அவருடைய தவறான செயல்களே.ஆனால் ஒரு தவறும் செய்யாமல் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தினாலேயே
இந்த நோய் அவளைத் தாக்கியிருக்கிறது.உங்களை விட்டால் அவளுக்கு வேறு வழி?எனவே தயவு செய்து அவளைக்கவனித்துக்கொள்ளுங்கள்.ஆறுதல் சொல்லுங்கள்.உங்களுக்கு இந்தமாதிரி கொடிய நோய் வந்தால் அவள் எப்படி உங்களைக் கவனித்துக்கொள்வாளோ அந்த அளவுக்கு நீங்கள் அவளைக் கவனித்துக்கொள்ளுங்கள்.நோயினால் அவதிப்படுவது அவள்மட்டுமே. நீங்கள் ஆதரவாக இருந்தாலே போதும்.அவள் படும் துன்பங்கள் எவ்வளவோ குறையும்.


சொந்தங்களுக்கும் சுற்றங்களுக்கும்

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் உங்கள் சொந்தவீட்டில் ஒருவருக்கு இந்தநோய் வந்தால் ஒதுக்கிவைப்பீர்களா?இது ஒன்றும் தொற்றுநோயல்ல.முறையான சிகிச்சை கொடுத்தால் குணமாகக் கூடியதுதான்.அவளை ஒதுக்கிவைப்பதால் உங்களுக்கு ஆகக் கூடியது எதுவுமில்லை.ஆனால் உங்களின் அன்பும் ஆதரவும் கிடைத்தால் அவளுக்குக் கிடைக்கும் நிம்மதி இருக்கிறதே!அது அளவிடமுடியாது. அடிக்கடி போய்ப் பாருங்கள்.ஆறுதல் சொல்லுங்கள்.உங்களின் செயலால் ஒரு செலவில்லாமல் ஒரு நோயாளிக்கு ஆறுதல் கிடைக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்?அது உங்களுக்கும் பெருமை அல்லவா?

மார்பகப் புற்றுநோய் வராத பெண்களுக்கு

முதலில் மருத்துவக் காப்பீடு செய்துகொள்ளுங்கள்.அதில் அடங்கும் நோய்களில் கேன்சர் நோயும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் வயது நாற்பதை எட்டி விட்டதா? உடனே மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.ஒவ்வொரு ஆண்டும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்.
குளிக்கும்போது வாரம் ஓரிருமுறை மார்பகங்களை நன்கு அமுக்கியும் தடவியும் ஏதேனும் கட்டியாகத் தென்படுகிறதா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.தென்பட்டால் உடனே டாக்டரை அணுகுங்கள்



டாக்டர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
எனக்கே சிரிப்பாக இருக்கிறது.பைத்தியக்காரத் தனமாகவும் இருக்கிறது.யாருக்குப் போய் யார் சொல்வது?இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்கிறேன்.தவறாக இருந்தால் கண்டியுங்கள்.திருத்திக்கொள்கிறேன்.
இன்றைக்கு எல்லாமே எந்திரத்தனமாகிவிட்டது.உங்கள் பணியை அப்படி ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.நோயாளிகள் உங்களை நாடி வருகிறார்கள்.அவர்களுக்கு இந்த நோயைப் பற்றி என்ன தெரியும்?நீங்கள் தான் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.என்னென்ன சிகிச்சை தரப்படும்,ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் தெளிவாகக் கூறுங்கள்.அவள் படும் வேதனைக்குக் கத்துவாள்.கதறுவாள்.ஆனாலும் உங்களின் தரமான சிகிச்சையினாலும் ஆறுதலான அணுகுமுறையினாலும் மட்டுமே அவள் குணமாவாள்.
அவளுக்கு நீங்கள் டாக்டர் மட்டுமல்ல.நீங்கள் தான் கடவுள்.எனக்குத் தெரிந்து சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோயாளிகளிடம் நர்சுகள்"நீ எல்லாம் எதுக்கு சிகிச்சை எடுக்குரே.இன்னும் ஆறு மாசத்துக்குள்ளாரவே செத்துப்பொயிடுவே.உனக்கு டிரீட்மெண்ட் கொடுக்கிறதே வேஸ்ட்"என்றெல்லாம் பேசுவார்களாம்.கையில் பணமில்லாத கொடுமையால் இலவச சிகிச்சை நாடிப் போகும் இடத்தில் இந்தப் பேச்சுகளையும் தாங்கிக் கொண்டு அந்த நோயாளிகள் உயிருடன் இருக்கிறார்கள்.டாக்டர் கடவுள் என்றால் நர்சுகள் கடவுளின் உதவியாளர்கள்.அவர்களிடமிருந்து இத்தகைய கொடுமையான வார்த்தைகள் வரலாமா?உங்களைப் போல உங்களை நாடிவரும் நோயாளிகளும் மனிதர்கள் தான்.நீங்கள் மருத்துவமனையில் வேலை செய்யவில்லை.சேவை செய்கிறீர்கள்.மனிதநேயத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள்.நோயைக் குணமாக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வரும் நோயாளிகளின் கனவைச் சிதைத்துவிடாதீர்கள்.


சமூகச் சிந்தனையாளர்களுக்கும்,பெண் விடுதலைப் போராளிகளுக்கும் ஒரு வேண்டுகோள்.

மார்பகப் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை அறுத்து எறிந்துவிட்ட பெண்களில் எத்தனை பேர் வாழ்வில் சந்தோஷமாக இருக்கிறார்கள்?மீண்டும் மீண்டும் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து சிகிச்சைகள்,வலி,உறவினர்களின் அணுகுமுறை,மற்றவர்களிடத்திலிருந்து தள்ளிவைக்கப்படும் கொடுமை,எல்லாவற்றிலும் மேலாகக் கட்டிய கணவனே வேறு பெண்ணைத் தேடிச் செல்வதைத் தடுக்கமுடியாத இயலாமை இவைகளோடு மட்டுமல்லாமல் சிகிச்சைகளினால் ஏற்படுகின்ற உடல் ரீதியான பாதிப்புகள் இவைகளுடன் இவர்களும் வாழ்கிறார்கள்.இவர்கள் வாழ்வில் என்ன அர்த்தம் இருக்கிறது?சொல்லுங்கள்.இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.

மருத்துவ உலகில் கேன்சர் நோய்க்கான சிகிச்சையின் முடிவு ''சக்சஸ்''என்ற இறுதிக்கட்டத்தை எட்டவில்லை.''சர்வைவல்''என்ற ஆரம்பக் கட்டத்திலேயேஇருக்கிறது.இதற்கே மாபெரும் யுத்தம் நடத்த வேண்டியிருக்கிறது.

குறிப்பாகப் பெண்களுக்கு மட்டுமே வரக் கூடிய நோய் என்பதால் இறுதியாக ஒரு எச்சரிக்கையுடன் இப்பதிவை முடிக்கிறேன்.

பெண்களே,நீங்கள் யாராகவும் இருக்கலாம்.மிகப் பெரிய அரசியல் வாதியாகவோ,அரசு அதிகாரியாகவோ,வழக்குரைஞராகவோ,டாக்டராகவோ,சமூகத்தில் அந்தஸ்து மிகுந்தவராகவோ,பணக்காராராகவோ,ஏழையாகவோ இருக்கலாம்.ஆனாலும்
நீங்கள் பெண்ணாக இருப்பதாலேயே உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் இருக்கிறது.
எச்சரிக்கையுடன் இருங்கள்.நலமாக வாழுங்கள்.