Saturday, July 7, 2007

சிலநேரங்களில் சில நோய்கள்

"மங்கையராய்ப் பிறப்பதற்கே மா தவம் செய்திட வேண்டுமம்மா!"என்று பாடினான் பாரதி.இல்லை,இல்லை.மா பாவம் செய்திருக்க வேண்டும் என்கிறேன் நான்.அதிர்ச்சியாக இருக்கிறதா?என்னடா இவள் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவளோ?என எண்ணுகிறீர்களா?மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு பெண்ணும் இதைத்தான கூறுவாள்.
மனித சமுதாயத்தில் எவ்வளவோ துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துவிட்டோம்.நாகரிகத்திலும் மேம்பட்டுவிட்டோம்.அதற்கேற்பப் பலவிதமான செளகரியங்களும் அதன் விளைவாகப் பல்வேறு நோய்களும் பெற்றுவிட்டோம்.நடந்தும் கட்டைவண்டியிலும் சென்று கொண்டிருந்த காலம் போய் விட்டது.விதவிதமான சொகுசுக் கார்கள்,டிரெயின்,ஏரோப்ளேன் என வேகத்தில் காலத்தையே
முந்த முயற்சிக்கிறோம். மருத்துவத்துறையிலும்தான் எத்தனை மாற்றங்கள்?ஐம்பது ஆண்டுகளுக்குமுன் ஒரு ஏரியாவுக்கு ஒன்றிரண்டு கம்பவுண்டர்கள் இருப்பார்கள்.அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த நேரம் போக மீதி நேரத்தில்
வீட்டிலேயே மருத்துவம் பார்ப்பார்கள்.தலைவலி காய்ச்சல் வயிற்றுப்போக்கு என எந்த நோய் வந்தாலும் நோயாளிகள் கையோடு ஒன்றிரண்டு பாட்டில்களையும் கொண்டுபோக வேண்டும்.அந்தப் பாட்டில்களில் கலர்கலராய் மருந்து ஊற்றுவார்.மிகச்சில நபர்களுக்கு ஒரு சில மாத்திரைகளைப் பொடி செய்து பவுடராக்கி பொட்டணங்களாக மடித்துத் தருவார்.
அவ்வளவு தான் மருந்து. ஃபீஸ் எவ்வளவு என்று கேட்கிறீர்களா? வெறும் நாலணா.அதாவது இருபத்திஐந்து பைசா மட்டுமே.அவர் கொடுக்கும் மருந்துக்கான விலையும் அதில் அடக்கம். அதெல்லாம் அந்தக்காலம்.இப்போது தலைவலி என்றால் போதும்.ஒற்றைத் தலைவலியா இரட்டைத் த்லைவலியா என்று டாக்டர் கேட்பார்.ஒற்றைத் தலைவலி என்றால் அடுத்த தெருவில் உள்ள ஸ்பெஷ்லிஸ்ட்டைப் பாருங்கள் என்று ஆலோசனை சொல்லிவிட்டு அதற்கு ஃபீஸ் ஐநூறு ரூபாயைப் பிடுங்கிக்கொள்வார்.அதாவது ஒவ்வொரு வகையான வியாதிக்கும் ஒவ்வொரு துறையாகப் பிரித்து அதில் ஸ்பெஷலைஸ் செய்து படித்த டாக்டர்கள் வந்து விட்டார்கள்.ஏன் நீங்களே பார்க்கலாமே என்று நாம் கேட்க முடியாது.எதற்கெடுத்தாலும் இ.ஸி.ஜி.,ஸ்கேன்(அதிலும் அல்ட்ராசவுண்டு.,சி.டி.,எம்.ஆர்.ஐ..,64ஸ்லைடு ஸ்கேன்.,பெட் ஸ்கேன் என்று பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்) அத்தோடு பிளட் டெஸ்ட் எல்லாம் முடித்துக்கொண்டு மீண்டும் டாக்டரைப் பார்க்க வேண்டும்.ஒவ்வொன்றாக அனைத்தையும் பரிசீலித்தபின் ஒன்றும் பிரச்சனையில்லை.கவலைப்படாதீர்கள்.தலைவலி வரும்போதல்லாம் இதில் ஒரு மாத்திரையைச் சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு ஒரு சீட்டில் மருந்து எழுதித் தருவார்."மெடாசின்"என்று எழுதியிருக்கும் அதில். அவரைச் சொல்லிக் குற்றைமில்லை.எழுதிக்கொடுக்கும் மருந்தினால் ஏதாகிலும் ஏடாகூடமாகி விடக் கூடாது என்பதற்காகவும்,தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும்,ஸ்கேன் முதலிய டெஸ்டுகளினால்
கமிஷன் கிடைப்பதினாலும் அவர் இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.
நமக்கும் வேறு வழி இல்லை.இன்றைய அவசர உலகில் அனைத்திலும் சீர்கேடு என்பதில் நமது உடல் நலமும் அடங்கி விட்டது.எவ்வளவுதான் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தாலும் நோய் வந்துவிடுகிறது.வேறு வழியில்லாமல் டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை பெறுகிறோம்.இதில் யாரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
சரி.இதற்கு டாக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
"வருமுன் காப்போம் என்பது சில நோய்களுக்கு மட்டுமே பொருந்துகிறது.
புகை பிடிக்காமல் இருந்தாலே இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். கொழுப்பு சேர்க்கலாமா?" "கூடாது கூடாது.இதயநோய் வருவதற்கு கொழுப்பும் முக்கிய காரணம்." "சரி ஸ்வீட் ,மட்டன் சிக்கன் சேர்க்கலாமா?" " என்ன சார்.இப்ப தானே சொன்னேன்.கொழுப்பு சேர்க்காதீர்களென்று?" "ஓஹோ!சரிவேறென்ன செய்ய வேண்டும்?" "தினமும் அரை மணி நேரமாவது ந்டைப் பயிற்சி மேற்கொள்ளவேண்டும்." "ஓகே.
இதெல்லாம் மேற்கொண்டால் ஹார்ட் அட்டாக் வராதா?" "ஹூஹும்.வராமல் இருக்க வாய்ப்புகள் அதிகரிக்கும்.அவ்வளவுதான்."
இப்படியே ஒவ்வொரு நோய்க்கும் ஒரு காரணம் சொல்லமுடியும்.
"சரி,ஒரு கெட்ட பழக்கமுமில்லை.தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்.சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறேன்.உணவு முறையில் நீங்கள் சொன்னதை அப்படியே கடைபிடிக்கிறேன்.நோயே வராதா" என்று கேட்டால் ?
"பெரும்பாலான நோய்கள் வருவதற்கு வாய்ப்பில்லை.ஆனால்?"
"என்ன ஆனால்? "
"பரம்பரை நோய்களான சர்க்கரை நோய்,புற்றுநோய் வரலாம்.
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?"
"என்ன சார் எங்க அப்பா அம்மா தாத்தா பாட்டி யாருக்குமே இந்தநோய் இல்லையே?" "அப்படியானால் உங்க கொள்ளுத்தாத்தா,கொள்ளுப்பாட்டி இல்லேன்னா அவங்களோட பெற்றோர் யாருக்காயினும் இருந்திருக்கும்."
"சார் சார்.அப்படி எல்லாம் இல்லையே சார்." "ஓஹோ.அப்படீன்னா இனிமேல் உங்க குழந்தைகளுக்கு வரலாம். பரம்பரை நோயோன்னோ?"
இதற்குமேல் உங்களுக்குப் பேச வராது.

2 comments:

ilavanji said...

அனுராதா,

வலைப்பதிவுலகிற்கு உங்கள் வரவு நல்வரவாகுக. மன உறுதியுடன் போராடி மீண்டுவர வாழ்த்துக்கள்.

முன்னெல்லாம் நோய் இருக்கென உறுதிப்படுத்தத்தான் கடைசியாக டெஸ்ட் எல்லாம் எடுப்பார்கள். இப்போதெல்லாம் ஆரம்பத்திலேயே அத்தனை டெஸ்ட்டுகளும் இந்திந்த நோயெல்லாம் இல்லை என உறுதிப்படுத்துவதற்காகவே எடுக்கிறார்கள்.

Delphine, பத்மா அரவிந்த் என பல மருத்துவர்களும் இங்கே வலைப்பதிவர்களாக இருக்கிறார்கள்.

அனுராதா said...

இளவஞ்சி
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.