Wednesday, August 22, 2007

வார்த்தையின்றிப் போகும் போது மெளனத்தாலே நன்றி சொல்வோம்

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் முதலில் என் இதயத்தின்
ஆழத்திலிருந்து எழுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வளவு பின்னூட்டங்கள் வருமென்று கொஞ்சம் கூட
எதிர்பார்க்கவில்லை.அனைவருக்கும் தனித்தனியாகப்
பதில் பின்னூட்டம் இடுவதற்குப் பதிலாக ஒன்றாக ஒருங்கிணைத்து
புதிதாக ஒரு பதிவு பதியலாம் என்று என் கணவர் ஆலோசனை கூறினார்.

2003 ஆகஸ்டில் தான் இந்த நோய் தாக்கியிருப்பதை உணர்ந்தேன்.
அன்றிலிருந்து இன்றைய தேதி வரை இந்நோயை எதிர்த்து நான்
மேற்கொண்ட முயற்சிகள்,சிகிச்சை முறைகள்,மருத்துவமனை
அனுபவங்கள்,நல்லோரின் சந்திப்புகள்,அனைத்தையும் எழுத
எண்ணினேன்.அதன்படியே ஒவ்வொன்றாக எழுதி வருகிறேன்.

ஒரு மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்தபின் அவருடைய அணுகுமுறை,
பதில் சொன்ன பாங்கு,மருத்துவமனையின் செயல்பாடு
ஆகியவகளைப் பற்றிய எண்ணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கருத்தை
எனக்குள் உருவாக்கிவிடும்.பிற்காலத்தில் அந்த எண்ணங்கள்
தவறானவை என்றோ,சரியானவை என்றோ அனுபவம் தான் பாடம்
கற்பிக்கும்.அதன்படியேதான் நான் சந்தித்த ஒவ்வொரு மருத்துவரைப்
பற்றியும் மருத்துவமனையைப் பற்றியும் பதிந்து வருகிறேன்.

உதாரணமாக அப்பல்லோ டாக்டர் திரு ரமேஷ் நிம்மகட்டா
(நன்றி டெல்ஃபின்) மற்றும் டாக்டர் ஹேமந்த் ராஜ் ஆகியோரைப்
பற்றி நான் கொண்டிருந்த கருத்துகள் மிகவும் தவறானவை
என்பதைப் பிற்காலத்தில் நன்றாகவே உணர்ந்து கொண்டேன்.
அடுத்து வரும் பதிவுகளில் அவை கண்டிப்பாக இடம் பெறும்.

ஆனால்........மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஏற்பட்ட
கருத்துகளை இன்றைக்கு மாறியிருப்பதால் ஒவ்வொன்றையும்
இப்போது பதியும்போதே திருத்தித் திருத்தித் தான் எழுத வேண்டும் என்றால்........"எனக்கு கேன்சர் வந்தது. சிகிச்சை பெற்றுக்
கொண்டிருக்கிறேன்"......என்ற இரண்டே வாக்கியங்களில்
எனது பதிவு முற்றுப் பெற்று விடும்.(இன்னும் சுருக்கலாமோ!!)

எனக்கு எழுத அவ்வளவாக வராது.என் நெருங்கிய தோழியொருத்தியை
நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும்போது இந்நோயைப் பற்றிய
எனது அனுபவங்களை எவ்வகையில் பகிர்ந்து கொள்வேனோ
அதேவகையில் தான் உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒவ்வொரு சம்பவத்தையும் எப்படி விவரிப்பேனோ அப்படியே
இங்கும் விவரிக்கிறேன்.

நான் மேற்கொண்ட சிகிச்சை முறைகள் பற்றியும் இன்றைய
தேதியில் என் உடல் நிலை பற்றியும் அறிந்து கொள்ள
விழைவோர் உட்பட மற்றவருக்காகவும் சுருக்கமான தகவல்.

1) ரேடியேஷன் 25 அமர்வு முடிந்துள்ளது,
2) மார்பகம் முழுதும் புண் ஆகிப் பிறகு ஆறியிருக்கிறது.
இருப்பினும் பாதிப்புகள் உள்ளன.
3) வலது கை அக்குளில் அறுவை சிகிச்சை செய்து இருபத்து ஒன்பது
நிண நீர் சுரப்பிகள் (Axillarylimbnodes) அகற்றப்பட்டுள்ளன.
அங்கும் பாதிப்பை உணர்கிறேன்.
4) பிராக்கி சிகிச்சை(Brachy treatment)முடிந்துள்ளது.
5) கர்ப்பப் பை அகற்றப்பட்டது.
6) கல்லீரலிலும் புற்றுநோய் பரவியது கண்டுபிடிக்கப் பட்டது.
ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் பெட் ஸ்கேன்
எடுத்து உறுதி செய்ய்ப்பட்டது.
7) ஹெர்சப்டின்(Herceptin)என்னும் ஹார்மோன் ஊசி மருந்துடன்
கீமோ மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.இன்றுவரை
ஹெர்சப்டின் மருந்து நான்கு முறையும் கீமோ மருந்து
இருபத்து நான்கு முறையும் செலுத்தப்பட்டுள்ளது.
8) எதிர்வரும் 27/08/2007 28/08/2007 ஆகிய தேதிகளில்
ஹெர்சப்டின் ஊசி மருந்து ஐந்தாவது முறையாகச்
செலுத்தப்பட இருக்கிறது.
9) மார்பகம் அகற்றப்படவில்லை!!!
10)கடந்த நவம்பர் 2006லிருந்து டயாபடீஸ் "டைப் 2"வந்துள்ளது.
அதற்காகத் தினமும் மூன்று வேளை இன்சுலின் ஊசி போட்டுக்
கொள்கிறேன்.
11) இன்னும் உயிரோடு இருக்கிறேன்.
உங்கள் அனைவரோடும் இருக்கிறேன்.
12)வலி?...வலி?....எப்படி இருக்கிறது என்கிறீர்களா?
வலி என்று ஒரு காகிதத்தில் எழுதிப் படியுங்கள்.
நான் உணர்கிறேன்.

இனி கேள்விகளை எழுப்பிக் காத்திருப்பவர்களுக்குப்
பதில் தரவேண்டுமல்லவா?

'மூன்றாவது ஸ்டேஜ் வரும் வரை ஏன் விட்டு வைத்தீர்கள்?'
என டெல்ஃபின் கேட்டுள்ளீர்கள்.யாருக்குத் தெரியும்?
சாவும் நோவும் சொல்லிட்டா வருது?என்று மதுரையில்
ஒரு சொலவடை உண்டு.கேன்சரைப் பொருத்தமட்டில்
அது வளரும் வேகம் ஆளாளுக்கு வேறுபடும் என்பது
எனதுஅனுபவத்தில் கண்டேன்.ஒருவருக்கு கடுகு சைஸில்
இன்று காணப்படுவது ஒரு வருடம் கழித்து மிளகு அளவுக்கு
வளரலாம்.அல்லது எலுமிச்சை அளவுக்கு ஒரே மாதத்தில்
வளரலாம்.
'பண லிஸ்ட் தான் கொஞ்சம் பதற வைக்கிறது.அது பற்றியும்
ஆராயுங்கள்'என்று சுல்தான் ஆதங்கப்பட்டுள்ளார்.
ஆராயப்பட வேண்டிய முக்கியமான விஷயம் தான்.

சிலிக்கான் மார்பகம் பற்றி யோகன் பாரிஸ்' தெரிவித்த கருத்துக்கு
நன்றி.இதைப்
பொருத்துவதனால் விளையும் சாதகங்களை விடப்
பாதகங்களே அதிகம். இது குறித்து மட்டுமல்ல. புற்றிநோய்
குறித்து இணையத்தில் ஏராளமான தகவல்களைச்
சேகரித்து வைத்துள்ளேன்.

'உண்மைத் தமிழன்'அவர்களே! நான் யாரையும் நிந்திக்கவில்லை.
அந்த எண்ணமே என் வாழ்நாளில் இல்லை.என் எழுத்துக்கள்
அவ்வகையில் அமைந்திருப்பதாக எண்ணினால் மன்னியுங்கள்
நான் பட்ட படுகின்ற துன்பங்கள்,துயரங்களின்
வெளிப்பாடுகள் தான் அவை.


'மங்கை' ஆறுத்லுக்கு நன்றி.கவுன்சிலிங்கில் நீங்கள் சந்தித்த
பெண் போல நானும் பலரைப் பார்த்திருக்கிறேன்.இதே
கொடுமையைத்தான் அவர்களும் சொன்னார்கள்.


'கூத்த ந்ல்லூரான்'எனக்கும் மார்பகம் அகற்றப்படவில்லையே!
'தமிழன்' மருத்துவத்தின் இறுதிக் கட்டத்திற்கு இப்போது
வந்துள்ளேன்.இந்த ஆறு பகுதிகளில் பதிந்திருப்பது
2003 ஆகஸ்டு மாத இறுதியில் நடந்தவை.

'தருமி'மதுரைக்கு வரும்போது தங்களைக் காண
விழைகிறேன்.
'வவ்வால்' நல்ல புனைப் பெயர்.வலைப் பதிவர்களிலேயே
பொதுஅறிவு மிக்கவர் என்று தங்களைப் பற்றி என் கணவர்
கூறியுள்ளார்.

'இயற்கையை நேசி தெகா'' கண்டிப்பாக டாக்டர் டெல்ஃபினுடன்
தொடர்பு கொள்வேன்.அமெரிக்காவில் ஏழு பெண்களுக்கு
ஒருவர் வீதம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்
கொண்டே போகிறது.அமெரிக்காவில் இதற்கான
சிகிச்சைக்கான செலவுகள் மிக அதிகம்.ஆனால் அனைவருமே
மருத்துவக்காப்பீட்டுக்குள்ளாக்கப் பட்டிருப்பதால்
பிரச்சனை இல்லையாம்!

வி அவர்களே.எனக்கு ஆங்கிலம் தெரியாது. மன்னியுங்கள்.
நான் 8 ம் வகுப்பு வரை தான் படித்தவள்.

'துளசி கோபால்' சமூகம் மாற வேண்டியது குறித்து இன்னும் நான்
நிறைய எழுத இருக்கிறேன்."தேசி பண்டிட்லே இணைத்ததற்கு
நன்றி.

'வடுவூர் குமார்' உங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் காத்திருக்கிறது.

'அபி அப்பா' பொறுங்க பொறுங்க'


'ஒப்பாரி' உங்களைக்கண்டு பரிதாபப்படுகிறேன்.அப்பாவின்
கம்பீரம் குறைந்தால் தானென்ன?அப்பா அப்பா தானே?
அவர் துவண்டால் தோள் கொடுப்பதை விட்டுவிட்டு....
உடன் பிறந்த அக்காவும் அண்ணனும் அவஸ்தைப்
பட்டபோது பார்ப்பதைத் தவிர்த்தது ஏன்?ஏன்?

'பத்மா அரவிந்த்' கண்டிப்பாகத் தொடர்பு கொள்கிறேன்.நன்றி.


பின்னூட்டமிட்ட அனைத்துப் பதிவர்த் தோழர்களுக்கும்
தோழியர்களுக்கும் மீண்டும் நன்றி.




8 comments:

ILA (a) இளா said...

//இன்னும் உயிரோடு இருக்கிறேன்.
உங்கள் அனைவரோடும் இருக்கிறேன்.//
நன்றி ஆண்டவா.

வவ்வால் said...

நான் எதனையும் லேசாக எடுத்துக்கொள்வேன், ஆனால் என்னை மிகவும் பாதித்தது உங்கள் பதிவுகள் மற்றும் அனுபவங்கள். யாருக்கும் இந்நிலை வரக்கூடாது. மருத்துவம் காத்ததை விட ,உங்கள் மன திடம் தான் உங்களை வாழவைக்கிறது என்பேன். என்னாளும் உங்கள் மனதிடத்தை கைவிடாதீர்கள். இதை தவிர சொல்வதற்கு எனக்கு வேறு வார்த்தைகள் இல்லை!

என்னைப்பற்றியும் சில வார்த்தைகள் நல்ல விதமாக சொன்னதற்கு என்றும் நன்றிகள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//எனக்கு எழுத அவ்வளவாக வராது//

அம்மா!
யார் சொன்னது, உங்கள் எழுத்து உங்கள் மனோதிடம் போல் கப்பீரமாக இருக்கிறது.

ஆண்டவனை வேண்டுகிறேன்.

துளசி கோபால் said...

//எனக்கு எழுத அவ்வளவாக வராது//

இதுதானே வேணாங்கறது:-))))))

அட்டகாசமா இருக்கு. எதிரில் இருப்பவரோடு பேசறமாதிரி எழுதுறதுதான்
என்னுடைய 'நடை'யும்.

ரெண்டுபேரும் ஒண்ணாவே 'நடை' போடலாம், வாங்க.

வடுவூர் குமார் said...

எனக்கு மட்டும் சஸ்பென்சா? அப்படியே இருக்கட்டும்.:-)
இதற்கு முன்பு நீங்கள் எழுதிய பதிவுகளை நான் படித்த ஞாபகம் இல்லை.நேற்றுகாலை தான் கண்ணில் பட்டது.
எனது மனைவிக்கும் உங்கள் பதிவின் சுட்டியை அனுப்பப்போகிறேன்.

Sowmya said...

வணக்கம்.

தங்களின் வலைப்பதிவில் பதிவுகளை படித்த பின், தங்களின் தளராத மனமும், உறுதியும் நம்பிக்கையை ப்றைசாற்றும் பாடமாக அமைந்துள்ளது. நீங்கள் உங்கள் பதிவுகளில் கூறியது போல், பல் வேறு மருத்துவ முறைகளில் நோயை குணப்படுத்த முயன்று கொண்டு இருக்கிறீர்கள் என்பது விளங்குகிறது. சித்த மருத்துவத்தில் எனக்குத் தெரிந்து பல கேன்சர் நோயாளிகளைகுணப்படுத்திய சித்தர் சுப்ரமண்ய சுவாமி அவர்களின் ஆசிரம்த்தில் பல பேர், இதற்காகவே சென்று நலம் பெறுகின்றனர். கீழ்கண்ட முகவரியில் அவர் ஆசிரமம் இயங்குகிறது. தாமதம் செய்யாமல் , சென்று நலம் பெறவும்.

சிவ சுப்ரமண்ய சுவாமி ஆசிரமம்,
பத்ராவதி - 577302
ஷிமோகா மாவட்டம்
கர்னாடகா

தொலைப் பேசி : 08282 - 267206

இதை பின்னூட்டமாக கருதாமல், தங்கள் நலனில் அக்கறை கொண்ட பல நல்ல உள்ளங்களின் வேண்டு கோளாக ஏற்று, உடனே செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

Unknown said...

Went thru your writings.
Cancer is a dreadful disease indeed. Your articles took me some 20 years back when I was a regular visitor to Kidwai Hospital here in Bangalore. My mother was a victim to colostomy - rectal cancer. Myself and my wife had a tough time handling this for quite a few months. She was operated which resulted in connecting a bag to her stomach permanently where her faecal material was collected and had to be disposed off.

The solution was worse than the problem itself. But then those days that was the only option available. I was told that few people were living with that bag, without any problem for years.

My mother was a pious lady. She was in her sixties then. She kept on lamenting 'why this disease should come to me, I had been to so many temples, prayed to so many Gods...etc., '. We did not have an answer. Yes, she was really a pious lady, very kind hearted all along. But then she was obese, had piles for quite some time. We FAILED to help her by diagnising the disease early. She also took it as a common problem of piles and took all sundry medicines.

It is our ignorance most of the times and our unwillingness to accept it as a serious problem and find a suitable answer. Instead we tend to find shortcuts and shortterm remedies. The result was there for us to see - shocking and painful life.

Hospital staff told us that 90% of the cases coming to them were terminal cases because all were beyond stage 3 or above that category. My mother was likely to survive for abt 2 years or more I was told. After the operation she went into a shell. She did not want others to see her condition and lived a secluded life. Even my own brother (her own son) and some close relatives avoided us. She eventually died within six months of her operation.

I really felt relieved by her death though I cried a lot. She did not want to live in that condition for long and we too felt that with that mental and physical pain God should give her eternal rest. Poor lady, she spent her last days in isolation from the whole world physically and mentally. For many years after her death in 1988, I was serching for an answer to her question. "Why this disease should come to me.....??" Till date I am not able to find an answer.

But then, God is great and His will be done.

a.sundararaman

அனுராதா said...

வருகைக்கும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி சுந்தர்.தங்களது தாயாரின் கேள்விகளைத்தான் இந்த நோய் வந்த மற்றப் பெண்களும் கேட்கிறார்கள்.(நான் உட்பட)சந்தோஷங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகுமென்றும் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டால் பாதியாகுமென்றும் சொல்வார்கள்.எது வரினும் வருவதை எதிர் கொள்ளுங்கள்.வாழ்வு சுவையாகும்.