Tuesday, October 23, 2007

கீமோ ஊசி மருந்துகளின் பின்விளைவுகள் 2

அடுத்து 2007 மே மாதம் 4ம் தேதி மருத்துவமனைக்குச் சென்றோம்.இந்தக் காலகட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்து விட்டது.ஏற்கனவே போட்ட வினோரல்பின் என்ற கீமோ ஊசியினால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர் சொன்னார்.அன்று இபிருபிசின் என்ற கீமோ மருந்தும்,லெடாக்சின் என்ற கீமோ மருந்தும் ஏற்றப்பட்டன.உடலில் ரத்தம் மிகவும் குறைந்திருப்பதாகவும் மறுநாள் வந்து ஒரு யூனிட் ரத்தம் ஏற்றிக்கொள்ளும் படியும் டாக்டர் சொன்னார்.அதன்படியே மறுநாள் சென்று ரத்தம் ஏற்றிக்கொண்டேன்.

அடுத்து மே 30ம்தேதி சென்றோம்.முதலில் ஹியூமன் அல்புமின்,புரோட்டின் ஊசி மருந்துகளும் அதன்பின் இபிருபிசின்,லெடாக்சின் கீமோ மருந்துகளும் ஏற்றப்பட்டன .சூன்30ம் தேதியும்,சூலை 27ம் தேதியும் மேற்சோன்ன இரு கீமோ ஊசி மருந்ந்துகள் ஏற்றப்பட்டன.
அன்று வீட்டுக்குப் புறப்படும்போது டாக்டரைச் சந்தித்தோம்.அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 27ந் தேதி வரச் சொன்னார்.அன்றைக்கு ஹெர்சப்டின் ஹார்மோன் ஊசி மருந்தை ஐந்தாவது தடவையாக ஏற்றப் போவதாகச் சொன்னார்.நால்வடக்ஸ் (டமாக்சிபன்) மாத்திரையை நிறுத்திவிடுமாறும்,அதற்குப் பதிலாக ஆரோமசின்(எக்செமெஸ்டேன்)(Exemestane)என்ற கீமோ மாத்திரையைத் தினமும் ஒரு மாத்திரை உட்கொள்ளுமாறும் சொன்னார்.இம்மாத்திரை சற்று விலை உயர்ந்தது என்றும் பாரி முனையில் உள்ள ஃபார்மசிக்கடைக்குத் தகவல் அனுப்பினால் வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுவார்கள் என்றும் சொன்னார்ர்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்,இம்மாத்திரைகளைஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசமாகத் தருவதற்கு "மாலா"என்ற அமைப்பு இந்தியா முழுதும் இயங்கி வருவதாகவும் சென்னை தியாகராய நகரில் இதன் கிளை அலுவலகம் இயங்குவதாகவும் பதினைந்து மாத்திரை கொண்ட அட்டையை மாத்திரை தீர்ந்ததும் அங்கு கொண்டு சென்று கொடுத்து விட்டால் பதினைந்து மாத்திரைகொண்ட இன்னொரு அட்டையைத் தருவார்கள் என்றும் கூறினார்.டாக்டர் சொன்னதன் பேரில் அந்த நிறுவனதில் என் பெயரைப் பதிந்துகொண்டேன்.மறுநாளே இம்மாத்திரையை வரவழைத்துத் தினமும் ஒரு மாத்திரை உட்கொள்ள ஆரம்பித்தேன்.

இந்த இடத்தில் மீண்டும் ஒரு பிரச்சனை முளைத்தது.2003 செப்டம்பரில் ரேடியேசன் கொடுக்கும் காலங்களில் வலது காதில் ''ஙொய்'' என்று சுவர்க்கோழி கத்துவது மாதிரி விட்டு விட்டுக் கேட்க ஆரம்பித்தது.அப்போதே டாக்டரிடம் இதைப் பற்றிச் சொன்னேன்.அதை டாக்டர் குறித்து வைத்துக்கொண்டார்."சத்தம் கேட்க ஆரம்பியிருச்சா"என்றார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.இப்போது மேற்சொன்ன ஆரோமசின் கீமோ மாத்திரையை சாப்பிட ஆரம்பித்த மூன்று நான்கு நாட்களிலேயே வலது காதில் மீண்டும் "ஙொய்"என்று சத்தம் கேட்க ஆரம்பித்தது.பகல்நேரத்தில் அவ்வளவாகக் கேட்காது.பல வேலைகளில் ஈடுபடுவதாலும்,டி.வி.,ரேடியோ,சத்தங்களாலும் இந்த சத்தம் அவ்வளவாகக் கேட்காது நிசப்தமாக இருந்தால் கேட்க ஆரம்பிக்கும்.அதுவும் இரவு படுக்கும்போது மிகத் துல்லியமாகக்கேட்கும்.
இத்துடன் மலச்சிக்கலும் ஏற்பட ஆரம்பித்தது.சரிதான் பிரச்சனை திரும்பவும் ஆரம்பமாகிறது போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.மலச்சிக்கலுக்கு டாக்டர் ஏற்கனவே எழுதிக்கொடுத்திருந்த மருந்துகளைச் சாப்பிட ஆரம்பித்தேன்.காதில் சத்தம் கேட்கும் பிரச்சனக்கு என்ன செய்வது?சரி. நாமாகவே இந்த கீமோ மாத்திரையைத் தற்காலிகமாக நிறுத்தித்தான் பார்ப்போமே என்று மூன்று நாட்களூக்கு ஆரோமசின் கீமோ மாத்திரையைச் சாப்பிடுவதை நிறுத்தினேன்.என்ன ஆச்சரியம்?காதில் சத்தம் கேட்பது குறைந்தது.இதை டாக்டரிடம் ஃபோனில் சொன்னேன்.எக்காரணத்தைக்கொண்டும் இந்த கீமோ மாத்திரையை நிறுத்தக் கூடாது என்றும் வாழ்நாள் முழுதும் இந்த மாத்திரையைச் சாப்பிடவேண்டும் என்றும் இல்லாவிட்டால் சிகிச்சை பலனளிக்காது என்றும் எச்சரித்தார்.அன்றே மீண்டும் அந்தக் கீமோ மாத்திரையைச் சாப்பிட ஆரம்பித்தேன். வழக்கம்போல காதில் மீண்டும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. மலச்சிக்கலுக்குத் தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டேன்.

அடுத்து ஆகஸ்டு 27ம்தேதி மருத்துவமனை சென்றோம்.
அன்றைக்கு மருந்து வரவில்லை.எனவே செப்டம்பர் 3ந் தேதியன்று வரச் சொன்ன்னார்கள் அதன்படியே செப்டம்பர் 3ந்தேதி சென்று அட்மிட் ஆகி ஹெர்சப்டின் ஹார்மோன் ஊசிமருந்து போட்டுக்கொண்டேன்.வழக்கம்போல் பனிரெண்டு மணி நேரம் ஆனது. டாக்டர் வந்திருக்கும்போது
காதில் ஏற்படும் பிரசனையை மீண்டும்சொன்னேன். ஈ.என்.டி. ஸ்பெசலிஸ்ட் ஒருவரை அனுப்புவதாகச் சொன்னார்.பிறகு,ஒரு காது மூக்கு தொண்டை க்கான டாக்டர் வந்து பரிசோதித்தார்.காதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் நன்றாக இருப்பதாகவும் நீங்கள் சாப்பிடும் கீமோ மாத்திரையின் பாதிப்பாக இருக்கலாம் என்றும் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போகும்போது டாக்டரைச்சந்தித்தோம்.அடுத்ததாக அனைத்து டெஸ்டுகளும் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று எழுதிக்கொடுத்தார். 15ந் தேதிவிநாயகர் சதுர்த்திக்குக்குப் பிறகு எல்லாடெஸ்டுகளையும் எடுத்துக்கொண்டு 18ந் தேதியன்று வந்து பார்க்குமாறு சொன்னார்.


ஒருவாரம் சென்றது காதில் சத்தம் கேட்பது மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன்.இதை எங்கே போய்ச் சொல்வது?யாரிடமாவது போய்ச் சொன்னால் இவளுக்கு சித்தப்பிரமை பிடித்திருக்கிறதோ என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்களே!என்று தயங்கினேன்.

பிறகு எங்களுக்குப் பழக்கமான இன்னொரு காது மூக்கு தொண்டை டாக்டரை அணுகுவது என்று தீர்மானித்தோம்.இதன்படி கீழ்பாக்கத்தில் உள்ள டாக்டர் கார்த்திகேயன் என்ற ஈ.என்.டி. டாக்டரைப் போய்ப் பார்த்தோம்.அவர் நன்றாகப் பரிசோதித்தார்.ஆடியோ டெஸ்டிங் எடுத்தும் பார்த்தார்.காதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் சொன்னார்."காதின் உள்ளே கிட்டத்தட்ட நடுப்பகுதியில் இருந்து மூளைக்கு மில்லியன் கணக்கில் நரம்புகள் செல்கின்றன.அவைகளில் ஏதோ ஒன்றிரண்டு நரம்புகள் ரேடியேசன் கொடுக்கும்போதே சேதம் ஆகியிருக்கலாம்.இதை ஒன்றும் செய்யமுடியாது.இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.பகலில்தான் பிரச்சனை இல்லையே.எனவே இரவு படுக்கும்போது ஏதாவது பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே தூங்குங்கள்"என்றார்.என்ன செய்வது?இப்போதெல்லாம் இந்த சத்த்த்துடனேயே வாழப் பழகிக்கொண்டேன்.

அடுத்ததாக ஏற்கனவே டாக்டர் கூறியபடி பிளட்டெஸ்ட், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. அல்ட்ரா சவுண்டு,எக்கோ,சி.டி.ஸ்கேன்,எம்.ஆர்.ஐ.ஸ்கேன்,நியூக்ளியர் ஸ்கேன் ஆகியவைகளை 14,15,17 ஆகிய தேதிகளில் எடுத்தோம்.18ந் தேதி டாக்டரைச் சந்தித்தோம்.

ரிப்போர்ட்டுகள் அனைத்தையும் பரிசீலித்துப் பார்த்தார் டாக்டர்.
மிக அருமையான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.சிகிச்சை தொடரும் என்றும் ஆனால் இனிமேல் மாதா மாதம் இல்லை என்றும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஹெர்சப்டின் ஹார்மோன் ஊசி மருந்து போட வேண்டும் என்றார்.காதில் ஏற்பட்ட பிரச்சனைக்கு டாக்டர் கார்த்திகேயனைச் சந்தித்ததைச் சொன்னேன்.ரேடியேசன் நேரத்திலேயே காதில் டாமேஜ் ஆகியிருக்கலாம் என்றும் இதோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்.அடுத்த சிகிச்சைக்கு 2008ம் ஆண்டு சனவரி மாதம் பொங்கல் கழித்து மருத்துவமனைக்கு வருமாறும் கூறி அனுப்பிவிட்டார்.

9 comments:

வடுவூர் குமார் said...

அப்பாடி- கொஞ்சம் சந்தோஷம் வந்தது.

PPattian said...

நிகழ்காலத்துக்கு வந்துட்டோம். விரைவில் குணமாகி மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.

இலவசக்கொத்தனார் said...

//இந்த கீமோ மாத்திரையைத் தற்காலிகமாக நிறுத்தித்தான் பார்ப்போமே என்று மூன்று நாட்களூக்கு ஆரோமசின் கீமோ மாத்திரையைச் சாப்பிடுவதை நிறுத்தினேன்.//

ஏங்க, இவ்வளவு பிரச்சனைகள் இருக்கு. நீங்க பாட்டுக்கு என்னமோ தானே மாத்திரையை நிறுத்தறது எல்லாம் தப்பா தெரியலை?

cheena (சீனா) said...

அப்பாடி - ஒரு நிம்மதி - நிகழ் காலத்துக்கு வந்ததற்கு. 4 மாதம் ஓய்வு எடுத்து விட்டு பொங்கல் கழித்து மருத்துவ மனை சென்றால் போதும். ஓய்வெடுங்கள். இறைவனின் கருணை எப்போதும் தங்களின் பக்கமெ இருக்கும்.

seethag said...

உங்கள் உடல் முன்னேற்றம் குறித்து மிக சந்தோஷம் அனுராதா.

காதில் சத்தம் வருவது சிலனேரங்களில் மருந்தின் சைட் இஃஃஎக்ட் ஆக இருக்கலாம்.

உங்கள்ளூக்கு ஆறுதல் சொல்ல ஒரு விஷயம் சொல்கிரேன்.

மனனோயாளிகளில் சிலருக்கு யாராவது பேசுவது போல் கேட்க்கும். பெரும்பலான னேரங்களில் அதை குணப்படுத்தலாம். இயலாதபோது, சிலருக்கு அது மிகுந்த அவதியாக இருக்கும், அவர்கள் காதில் என்ன கேட்கிரதோ அதைபொறுத்து.
அம்மாதிரி நேரங்களில் வாக்மேன் வைத்துக்கொள்ள சொல்லுவோம்.

இந்தியாவில் நான் பார்த்த ஒரு நபர் சொல்லுவார்..'இப்பொல்லாம் பேசுரவங்க ஃரெண்ஸ் மாதிரி டாக்டர்.அவங்க பாட்டுக்கு பேசிகிட்டே இருப்பங்க.'

எத்தனொயோ கஷ்ட்டங்களை கடந்துவிட்டீர்கள்.இந்த விஷயத்திர்காக மருந்தை விடாதீர்கள்.எனக்கு சொல்வது சுலபம், சாப்பிடுவது நீங்கள் தான். ஆனாலும் சொல்கிரேன்.

அனுராதா said...

வாங்க வடுவூர் குமார்,பிபட்டியன்,சீனா வாழ்த்துகளுக்கு நன்றி.

வாங்க இலவசக்கொத்தனார்.தப்புத் தான்.மாத்திரையை நிறுத்தினது தப்புத்தான்.நானும் ஒரு சாதாரண மனுஷி தானே.காதில் சத்தம் கேட்பது தாங்க முடியவில்லை.மனநோயாளிகள் சிலர் இவ்வாறு காதில் சத்தம் கேட்பதாகவும்,யாரோ கூப்பிடுவதாகவும்....ஏன்?ரேடியோ கேட்பதாகவும் யாரோ பாட்டுப் பாடுவதாகவும் கூடச் சொல்லுவார்கள்.இந்தப்பிரச்சனையை நான் வெளியே சொன்னால் என்னையும் மனநோய் பிடித்தவர் என்று பேச ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பயம்.என்வேதான் துணிந்து மாத்திரையை நிறுத்தும் முடிவை எடுத்தேன்.மூன்று நாளில் சத்தம் குறைந்ததே!டாக்டரின் எச்சரிக்கைக்குப் பிறகு வேறு வழி இல்லாமல் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவருகிறேன்.ஈ.என்.டி.டாக்டர் என் காதைப் பரிசோதித்துப் பார்த்து,காதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட சேதம் தான் காரணம் என்று சொன்னபிறகு தான் மனது நிம்மதி ஆனது.ஆனால் இன்றுவரை இப்பிரச்சனை தொடர்கிறது.

அனுராதா said...

வாங்க சீதா.கண்டிப்பாக மருந்தின் சைட் எஃபக்ட் தான்.

செல்வநாயகி said...

பிரசுரிக்க அல்ல. தனிமடல்.
*********************

அன்பிற்கினிய அணுராதா,

சக்தியில் என் இடுகையொன்றில் உங்கள் பின்னூட்டம் கண்டேன். பத்மா அர்விந்தின் மின்னஞ்சல் கேட்டிருந்தீர்கள். padma.arvind@gmail.com என்பது அவரின் மின்னஞ்சல். மடலிட விரும்பினால் இடுங்கள்.

நானும் உங்களின் பல பதிவுகளை வாசித்து வருகிறேன். உங்களின் போராட்டம் வெற்றியடைந்து நீங்கள் முழு நலம் பெறவேண்டுமென விரும்புகிறேன்.

அனுராதா said...

நன்றி செல்வநாயகி.இன்று பத்மா அரவிந்த்துக்கு மடல் அனுப்பிவிட்டேன்.