Wednesday, November 28, 2007

மூளைக்கும் பரவியது பாழும் புற்றுநோய்

ஒரு முக்கியமான அறிவிப்பு
என் ஆருயிர் மனைவியின் உடல் நலம் அதிகமாகப் பாதிப்படைந்து வருகிறது.எனவே இப்பதிவிலிருந்து நான் தொடர்கிறேன்.
சரியான சமயத்தில் தக்க ஆலோசனை வழங்கிய நண்பர் ஓசை செல்லா அவர்களுக்கு நன்றி.
..........................................................................................

17.11.2007 ந் தேதி சனிக்கிழமை மாலை 5.30மணியளவில்
விமான நிலையத்திற்குக் கிளம்பினோம்.எங்கள் மகன் மருமகள் பேத்தி பணிப்பெண் அனைவரும் உடன் வந்தார்கள். லிப்டில் ஏறியதுமே அனுவுக்கு வாந்தி வந்துவிட்டது.எனக்குப் பகீர் என்றது.கர்சீப்பைக் கொண்டு துடைத்து சுத்தப்படுத்தினோம்.

டாக்சியில் ஏறும்போது அனுவால் வலது காலைத் தூக்கி வைக்க முடியவில்லை.மிகுந்த சிரமத்துடன் காரில் ஏற்றினோம்.விமான நிலையத்தில் இறங்கும்போதும் சிரமப்பட்டு இறக்கினோம்.அங்கு எங்கள் இரண்டாவது மகள்,மருமகன்,பேரன்,பேத்தி அனைவரும் வந்திருந்தனர்.இரவு 9.20க்குப் புறப்படவேண்டிய விமானம் ஒரு மணிநேரம் தாமதமாகக் கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டது.லக்கேஜ்களை செக் இன் செய்துவிட்டு ஹாலில் உள்ள செயற்கை மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மேடையில் அனுவை அமர வைத்தோம்.சுற்றிலும் நாங்கள் அமர்ந்துகொண்டும் நின்றுகொண்டும் பேசிக்கொண்டிருந்தோம்.பேரன் பேத்திகள் விளையாடுவதைப் பார்த்த அனு கொஞ்சமாகச் சிரித்தாள்.சிறிதுநேரம் சென்றதும் பாத்ரூம் போய் வருவோமா என்று கேட்டேன்.வேண்டாம் என்று தலையசைத்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை தானாகவே எழுந்து நின்றாள்.பின் விறுவிறு என நடக்க ஆரம்பித்தாள்.பின்னால் அவளைப் பிடித்தபடியே நான் தொடர்ந்தேன்.என்னை உதறி விட்டு டாய்லெட் இருக்கும் திசை நோக்கி சற்று வேகமாகவே நடந்தாள்.தனக்கு ஒன்றுமேயில்லை,நன்றாக நடக்க முடியும் என்பதைப் பிறருக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தாளோ என்னவோ!நாங்களும் அப்படித்தான் நினைத்தோம்.ஆனாலும் பின்னாலேயே நானும் என் மகளும் பணிப் பெண்ணும் அருகிலேயே பின்தொடர்ந்தோம். டாய்லெட் நெருங்கியதுமே அனுவுக்கு கால்கள் தடுமாறின.கீழே விழுவதற்குமுன் அனைவரும் தாங்கிப் பிடித்துக்கொண்டோம்.ஒருவழியாக மகள் பணிப்பெண் ஆகியோரின் உதவியுடன் பாத்ரூம் சென்று வந்தாள்.

இவைகளையெல்லாம் பார்த்த எங்கள் மகன் கவலையுடன் கேட்டான்.''அப்பா,நான் வேண்டுமென்றால் கூட வரட்டுமா?சென்னை வந்து வீட்டில் விட்டு விட்டு நாளையே திரும்புகின்றேனே!"என்றான்.நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்ன நினைத்தானோ தெரியவில்லை. எங்கள் இருவரின் பாஸ்போர்ட்,டிக்கட் ஆகியவற்றைக் கேட்டு எடுத்துக்கொண்டான்.''இதோ ஜஸ்ட் எ மினிட்''என்று சொல்லிவிட்டுச் சென்றான்.ஒரு பத்து நிமிடங்களில் திரும்பி வந்தான்.அப்பா!நீங்கள் போகும் இந்த விமானத்தில் வரிசைக்கு மூன்று சீட்கள் தான் இருக்கும்.அம்மாவை உட்காரவைக்கவோ பாத்ரூம் போகவோ சிரமமாக இருக்கும். எனவே உங்களிருவரின் டிக்கட்டுகளையும் பிஸினஸ் கிளாஸ் டிக்கட்டுகளாக மாற்றி முன் வரிசையில் எடுத்து வந்துவிட்டேன்.இதில் இருவர் மட்டுமே வசதியாக அமரலாம்."என்றான்.இதற்காகக் கூடுதலாக 600 சிங்கப்பூர் டாலர் செலுத்தியிருந்தான்!

சிறிது நேரத்தில் சக்கர நாற்காலி உதவியுடன் விமானத்திற்குப் புறப்பட்டோம்.முதல் வரிசையில் முதல் இரண்டு இருக்கைகளில் அமர்ந்துகொண்டோம்.வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த இட்லியைச் சாப்பிட்டோம்.நான்கு மணிநேரத்தில் சென்னை வந்தடைந்தோம்.

மறுநாள் 18.11.2007 ஞாயிற்றுக்கிழமை அனுவை நன்றாக ஓய்வெடுக்க வைத்தேன்.அடுத்தநாள் 19ந் தேதி திங்கட் கிழமையன்று பேட்டர்சன் கேன்சர் செண்டருக்குச் சென்றோம்.டாக்டரின் அறிவுரைகளின்படி மூளையை ஸ்கேன் எடுத்தோம்.பிளட் டெஸ்டும் எடுத்தோம்.ரிசல்ட்டுகள் அன்றிரவு ஏழு மணி சுமாருக்குக் கிடைத்தது.உடனே ரிசல்ட்டுடன் டாக்டரைப் பார்த்தோம்.

நீண்டநேரம் ஸ்கேனையே பார்த்துக்கொண்டிருந்தவர் நர்ஸைக் கூப்பிட்டு டிக்டேசன் சொல்ல ஆரம்பித்தார்."முன்பக்கம் இருபத்தைந்து பின்பக்கம் இருபத்தைந்து வீதம் தினந்தோறும் ரேடியேசன் தரவேண்டும் மொத்தம் ஐந்து நாட்கள் தர வேண்டும்..............."என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

''என்ன சார்.ரிசல்ட் என்ன வந்திருக்கு?என்று கேட்டேன்.
சிறிதுநேரம் என்னையே பார்த்தார்.நான் அவர் முகத்தை நேருக்கு நேராக உற்று நோக்கினேன்.
"என்ன தெரியணும்?"
"என்ன ரிசல்ட் வந்திருக்கு?"
ஸ்கேனைக் காண்பித்தபடியே டாக்டர் உதட்டைக் கடித்துக்கொண்டார்.
ஸ்கேனில் கொஞ்சம் பெரிய வட்டம் ஒன்றும் ஒரு சிறிய வட்டமும் தெரிந்தது.
என்னவென்று கேட்டேன்.டாக்டர் தலையசைத்தார்.பேசவில்லை.
கேன்சர் கட்டியா என்று கேட்டேன்.ஆமாம் என்பதுபோலத் தலையசைத்தார்.வயிற்றிலிருந்து ஏதோ குபுக்கென்று தொண்டைவரை வந்து போனது.
"கேன்சர் கட்டி தான் என்று எப்படிச் சொல்றீங்க?"
இப்போது டாக்டர் வாய் திறந்தார்."வேறு என்னவாக இருக்க முடியும்.?"
"ஏன்?டெஸ்ட் செய்து பார்க்க முடியாதா?"
டெஸ்ட் செய்யவேண்டுமென்றால் மண்டை ஓட்டைத் திறக்க வேண்டும்.
அது ரொம்ப ரிஸ்க்.பிரைய்ன் டியூமர் என்றாலே கேன்சராகத்தான் இருக்க வாய்ப்புண்டு.அதுவும் அனுராதாவுக்கு மார்பகத்திலிருந்து கல்லீரலுக்கு ஏற்கனவே பரவி இருக்கிறது.எனவே மீண்டும் பரவி மூளைக்குப் போயிருக்கிறது."
"சரி சார். இதற்கு என்ன டிரீட்மெண்ட்?''
"வேறென்ன?ரேடியேசன் தான்.
"எத்தனை முறை?"
"ஒரு ஐந்து நாள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.இங்கேயே அட்மிட் ஆகி விடுங்கள்."
"அதற்கப்புறம்?"
"பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் ஹெர்சப்டின் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு ஹெர்சப்டின் மருந்தில் கால் கால் பாகங்களாக நான்குவாரம் தொடர்ந்து கொடுக்க வேண்டும்."
"அப்புறம் சார்?"
"அப்புறம் பார்க்கலாம்.ஆனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது.ஸோ,முதல்லெ அதைக் கட்டுப் படுத்த வேண்டும்.நீங்க என்ன பண்றீங்க.நாளைக்கே டயாபடிக் செண்டருக்குப் போய் இன்சுலின் பம்ப் வைத்து சர்க்கரையெக் கண்ட்ரோல் பண்றீங்க.மறுநாள் புதன் கிழமை காலைல இங்கே வந்து அட்மிட் ஆறீங்க.புதன்,வியாழன்,வெள்ளி,சனி இந்த நாலு நாளுக்குள் ரேடியேசன் கொடுத்து விடுவோம்.சனிக்கிழமை சாயங்காலமே வீட்டுக்குப் போய்விடலாம்.

அதற்குள் ஒரு நர்ஸ் வந்து ஒரு சீட்டைக்கொடுத்து"இந்த ஊசி மருந்துகளை வாங்கி வாங்க.உடனே போடணும்"என்றாள்.பார்மஸிக்குச் சென்று வாங்கி வந்தேன்.அனுவுக்கு ஊசிகள் போடப்பட்டன.ஸ்டீராய்ட் மாத்திரைகள் ஆறுமணிநேரத்திற்கு ஒன்று வீதம் தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்ற அறிவுரைகளுடன் மருந்துச் சீட்டு வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் ரிசல்ட் என்னவென்று அனு கேட்டாள்.மூளையில் கட்டி வந்திருக்கிறது என்றும் ரேடியேசன் கொடுத்தால் சரியாகிவிடும் என்று டாக்டர் சொல்வதாகவும் சொன்னேன்.அனு வேறொன்றும் பேசவில்லை.இரு கண்களிலிருந்தும் நீர் மல்கியது.
ஏதாவது பேசு என்று பல முறை சொல்லியும் பேசவில்லை.

மறுநாள்20ந் தேதி கோபாலபுரத்தில் உள்ள எம்.வி.டயாபடிக் செண்டருக்குச்சென்று அட்மிட் செய்தேன்.பம்ப் மூலமாக இன்சுலின் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்டது.ஸ்டீராய்ட் மாத்திரைகள் சாப்பிட்டு வருவதால் சர்க்கரை அளவு ஒழுங்குக்கு வருவதாகத் தெரியவில்லை.அன்றிரவு சுமார் 8 மணி இருக்கும்.அனு என்ன நினைத்தாளோ! இன்சுலின் ஏறிக்கொண்டிருந்த ஊசியைக் கையில் இருந்து எடுத்து விடும்படிகேட்டாள்.சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இன்சுலின் ஏற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இந்நிலையில் ஊசியை அகற்றக்கூடாது என்றும் சொன்னேன்.அனு கேட்கவில்லை.எடுத்து விடுங்க எடுத்துவிடுங்க என்று வற்புறுத்த ஆரம்பித்தாள்.வலிக்கிறதாவெனக் கேட்டேன்."அன் ஈசியா
இருக்கு.உடனே எடுத்துவிடுங்க என்று சத்தமாகச் சொன்னாள். உடனே நர்சை
வரவழைத்து விபரம் சொன்னேன்.டாக்டருக்கு விபரம் தெரிவிப்பதாக நர்ஸ் சொன்னார்.

மீண்டும் அனு ஊசியை எடுத்துவிடும்படி வற்புறுத்தினாள்."சரி.ஊசியை எடுத்துவிடச் சொல்கிறேன்.பிறகு என்ன செய்யலாம் என்று கேட்டேன்.

"மதுரை"என்று சொல்லியபடியே கையை அசைத்தாள்.

மதுரைக்குப் போகலாம் என்கிறாயா என்று கேட்டேன். ஆமாம் என்று தலை அசைத்தாள்.
"மதுரைக்குப் போய்?"
"மீனாட்சி ஆஸ்பத்திரி"
"என்ன சொல்றே.மீனாட்சி மிசன் ஹாஸ்பிடலுக்குப் போகலாம் என்கிறாயா?"
"ஆமாம்."
"அங்கே போய் ரேடியேசன் கொடுக்கலாம் என்கிறாயா?"
ஆமாம் என்பதற்குத் தலையசைத்தாள்.
எனக்குப் புரிந்தது.

நான்கு ஆண்டுகளாக இந்த நோயுடன் போராடிப் போராடிக் களைத்துவிட்டாள்.மார்பகத்தில் ஆரம்பித்த புற்றுநோய் மூன்றாண்டுகளுக்குப் பின் கல்லீரலுக்குப் பரவியது. எவ்வளவோ நவீனசிகிச்சைகள் கொடுத்தபின்னரும் இப்போது மூளைக்கும் பரவியிருப்பது எங்களுக்கே சொல்லவொண்ணாத் துயரத்தைத் தந்திருக்கிறது.அவளுக்கு எப்படி இருக்கும்?
சரி.இனிமேல் சொந்த ஊர் திரும்பிவிடலாம்,உற்றார் உறவினர்களுடன் சேர்ந்திருக்கலாம்,வாழ்வின் இறுதிக் கட்டத்தை சொந்த ஊரில் கழிக்கலாம் என்ற மனநிலை அவளுக்கு வந்திருப்பது புரிந்தது.

உடனே டாக்டரை வரவழைத்தேன். அவரும் அனுவின் மனநிலையைப் புரிந்துகொண்டார்.இன்சுலின் பம்ப்பை உடனே அகற்றச் செய்தார்.அன்றிரவு முழுதும் அனு என்னென்னமோ சொல்லிக்கொண்டே இருந்தாள்.அவளும் உறங்கவில்லை.நானும் உறங்கவில்லை.
அன்றிரவு எங்கள் மகன் சிங்கப்பூரிலிருந்து போனில் பேசும் போது அனுவின் மனநிலையைச் சொன்னேன்.அவள் விருப்பப்படியே சொந்த ஊரான மதுரைக்கு உடனே செல்வது என்று முடிவு செய்தோம்.

அன்றிரவு பேட்டர்சன் கேன்சர் செண்டர் டாக்டர் விஜயராகவனை செல்பேசியில் தொடர்புகொண்டு விபரம் தெரிவித்தேன்."நல்லாக் கூட்டிக்கொண்டு போகலாமே"என்றார்.நீங்கள் ஒரு லெட்டர் தருகிறீர்களா என்று கேட்டேன்.லெட்டர் ஏதும் தருவதற்கிலை என்றும் என்னிடம் உள்ள ரிக்கார்டுகளே போதுமானது என்றும் சொல்லிவிட்டார்.

மறுநாள் 21ந் தேதி புதன்கிழமை விடிந்ததும் விடியாததுமாக கை ந்ரம்பில் குத்தியுள்ள ஊசியையும் எடுத்துவிடும்படி சொல்ல ஆரம்பித்தாள்.ஒன்பது மணியளவில் விசிட் வந்த டாக்டரிடம் சொல்லி அதையும் அகற்றச் செய்தேன்.உடனே வீட்டுக்குப் போகலாம் என்றாள்.டாக்டர் மாலை வரை இன்சுலின் ஊசி போட்டு என்ன அளவில் கன்ட்ரோல் ஆகிறது என்பதை உறுதி செய்துகொண்டு மாலை வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.இந்த விபரங்களை யெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகவும் திருப்பித் திருப்பியும் சொல்லி அனுவைப் புரிய வைத்தேன்.

அன்று மாலை மருத்துவமனையிலிருந்து திரும்பும் வழியில் அண்ணாநகரிலுள்ள ஒரு டிராவல் ஏஜன்சிக்குச் சென்று பாரமவுண்ட் ஏர்வேசில் மறுநாள் மதியம் 12.40மணி விமானத்திற்கான டிக்கட்டுகள் வாங்கிக் கொண்டேன்.வீட்டுக்கு வந்ததும் துணிமணிகள்,அத்தியாவசியமான பொருள்கள் மருந்து மாத்திரைகள் ஆகியவைகளை சூட்கேஸ்களில் பேக் செய்தேன்.

மறுநாள் 22ந் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் மதுரை வந்தடைந்தோம்.விமானநிலையத்திலிருந்து நேராக மீனாட்சி மிசன் மருத்துவமனைக்கு வந்து உடனே டாக்டர் கிருஷ்ணகுமார் என்பவரைச் சந்தித்தோம்.அனுவைப் பரிசோதித்துப் பார்த்தார்.ரிக்கார்டுகளையும் பார்த்தார்.அனைத்து ரிக்கார்டுகளும் நேர்த்தியாக வைத்திருப்பதாகப் பாராட்டிய அவர்,"ரேடியேசனுக்கு முன் கொடுக்கவேண்டிய மருந்துகளை ஏற்கனவே கொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.எனவே இன்றைக்கே ரேடியேசன் கொடுக்க ஆரம்பித்துவிடலாம்"என்றார்.சென்னை பேட்டர்சன் கேன்சர் செண்டர் டாக்டர் ரேடியேசன் ஐந்து நாளுக்குக் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்ததைச் சொன்னேன்.அப்படிக் கொடுக்கக் கூடாது என்று டாக்டர் கிருஷ்ணகுமார் சொல்லிவிட்டார்.இதற்கென்று சில முறைகள் உள்ளன என்றும் அதன்படியே கொடுப்பதாகவும் சொன்னார்.நானும் ஒப்புக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் ரேடியேசனும் கொடுக்கப்பட்டது.பிறகு எங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து சேர்ந்தோம்.

ஆக ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இன்று 27.11.2007 வரை ஐந்து முறை ரேடியேசன் கொடுக்கப்பட்டுள்ளது.இதுதவிர நேற்று 26ந் தேதி முதல் TEMOZOLAMIDE என்ற கீமோ கேப்சூல் மாத்திரையும் கொடுக்கப்பட்டு வருகிறது.பத்து நாட்களுக்கு இம்மாத்திரையுடன் ரேடியேசனும் கொடுப்பதால் நல்ல பலன் இருக்கும் என்று டாக்டர் தெரிவித்தார்.

இதுவரை ஐந்துமுறை ரேடியேசன் கொடுத்ததற்குப்பின் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.முகம் தெளிவடைந்துள்ளது.கொஞ்சம் நன்றாகவே பேச வருகிறது.ஆனால் பேசுவதில் குழப்பம் நீடிக்கிறது.நன்றாக நடக்க முடிகிறது. எழுவதிலும் ,உட்கார்வதிலும் சிரமம் உள்ளது.வலது கையில் ஏற்பட்டிருந்த வீக்கம் இப்போது இல்லை.கணிசமாகக் குறைந்துவிட்டது.

நேற்று மதுரையில் உள்ள வலைப்பதிவர் திரு சீனா அவர்களும் அவரது மனைவியாரும் வந்து நலம் விசாரித்துச் சென்றார்கள்.அனு முகமலர்ச்சியுடன் கொஞ்சம் பேசினாள்.
........................... அனுராதாவின் கணவன் எஸ்.கே.எஸ்...........................................................

40 comments:

தமிழச்சி said...

:-(((((

THAMILACHI

இரண்டாம் சொக்கன்...! said...

அன்னை மீனாட்சி,

உங்களுக்கு தேவையான மன உறுதியையும், உங்கள் மனைவிக்கு நலமும் அருள பிரார்த்திக்கிறேன்.....

தங்ஸ் said...

எல்லாவற்றையும் தாங்கும் வலிமையைத்தர இறைவனை வேண்டுகிறேன்..கண்களில் நீர் மல்குகிறது..

அபி அப்பா said...

என்ன சொல்வது அழுவதையும் பிரார்த்தனையும் தவிர:-(((

Anonymous said...

என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.

Anonymous said...

i will pray for your wife's recovery.

குசும்பன் said...

கண்களில் நீர் மல்குகிறது,என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.

வவ்வால் said...

வணக்கம்,

ஆரம்பத்தில் உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வந்தேன், பின்னர் இதில் வருபவற்றை படிக்க மனசே வருவதில்லை, அதனாலே உங்கள் வலைப்பதிவையே திறக்காமல் இருந்தேன், ஏதோ திறக்க கூடாத கதவு போல எனக்கும் ஒரு அச்சம் ஓடும், பதிவைப்பார்க்கும் போதெல்லாம். ஆனால் இப்பொழுது தீவிரமானதை அறிந்ததும் , என்ன சொல்வதென்று தெரியமால் மீண்டும் படிக்கிறேன். படிப்பதற்கே கடினமான ஒன்றாக இருக்கும் போது , நிஜத்தில் அனுபவிப்பது... எப்படி சொல்வது.

தைரியமாக இருங்கள். வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை!

குட்டிபிசாசு said...

எனக்கு படிக்கவே முடியவில்லை!! என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன்! :((((((((((((((

முத்துகுமரன் said...

நலம் பெற பிராத்தனைகள்

மங்கை said...

இந்த நேரத்தில் கடவுளைப் பிரார்த்திப்பதைத்தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை...

dondu(#11168674346665545885) said...

ரொம்பத்தான் சோதிக்கிறான் ஆண்டவன். சகோதரி நலம் பெற தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிவபாலன் said...

உங்கள் குடும்பத்தாரின் மன தைரியம் மெய் சிலர்க்க வைக்கிறது.

அனுராதா அவர்கள் நலம் அடைய வாழ்த்துக்கள்!

மலைநாடான் said...

தைரியமாகஇருங்கள்.

thiru said...

மனதிடனுடன் மருத்துவத்தை தொடருங்கள். அனுராதா அவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!

Sundar Padmanaban said...

சொல்லவேண்டும் போல் இருப்பதால் சொல்கிறேன் - உங்களுக்கு நன்றிகள்.

அனுராதா அவர்கள் நலமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சதங்கா (Sathanga) said...

உங்கள் குடும்பத்தாருக்கு மன உறுதி மேலும் பெருகவும், அனுராதா மேடம் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.

அமர பாரதி said...

ஆண்டவா, இவரைக்காப்பாற்று.

ILA (a) இளா said...

ஆண்டவா, தைரியமுள்ள மனசை குடு. சோதனை போதும் :(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதுவரை அவர் துன்பத்திலும் சொன்னவற்றை ஆர்வத்துடன் படித்தேன்.
இந்தப் பகுதி மிகுந்த வேதனை தந்தது.
தைரியமாக இருங்கள்..
சக பதிவர் திரு சீனு குடும்பத்தினருக்கு
நன்றி

Anonymous said...

இத்தனை இதயங்களின் பிரார்த்தனைகளும் வீண் போகாது. அனுராதா அம்மா விரைவில் குணமடைவார். நல்லிதயம் படைத்த உங்களுடன் இந்த கடினமான நேரத்தில் இறைவன் கூடவே இருந்து நல் வழி காட்டிட வேண்டுகிறேன்.

துளசி கோபால் said...

மனசு கனத்துப்போய் இருக்கு.
என்னென்னவோ எண்ணங்கள். தவறாக ச்சொல்லி இருந்தால் மன்னிக்கணும். தாங்காமப் புலம்பறேன்னு வச்சுக்குங்க.

அந்தச் சனியன் மார்பகத்தை அப்பவே வெட்டியெறிஞ்சிருந்தால் நோய் பரவாம இருந்திருக்குமேன்னு மனசு அடிச்சுக்குது.

இங்கே நம் தோழி ஒருவருக்குப் புற்று வந்து ரெண்டு மார்பகத்தையும் அகற்றி விட்டார்கள். இது நடந்து இப்போ ஆறு வருசம் ஆச்சு. அதுக்கப்புறம் ஹிப் ரீப்ளேஸ்மெண்ட், கைகளில் என்னவோ எலும்புத்தேய்வுன்னு ரெண்டு கைகளிலும் ஸ்டீல் கம்பி வச்சுருக்கு.

அவுங்களாகச் சொன்னாலொழிய யாருக்குமே இது தெரியாது. நல்லா சுறுசுறுப்பாத் தோட்டவேலைகளைச் செய்வாங்க. நல்ல க்வாலிட்டி ஆஃப் லைஃப் இருக்கு.

வயசும் 72 ஆச்சு. நல்லா இருக்காங்க.

ஹூம்..... என்னன்னு சொல்றது?

விதியின்மேல் பழியைப்போடலாமா?

எதாயிருந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் மனோ தைரியம் கொடுக்கணுமுன்னு கடவுளை வேண்டுகின்றேன்.

என்றும் அன்புடன்,
துளசி

Anonymous said...

மதுரை அழகர் சாமி உங்களுக்கு தேவையான மன உறுதியையும், உங்கள் மனைவிக்கு நலமும் அருள பிரார்த்திக்கிறேன்

Anonymous said...

இறைவன் உங்களுக்கு மன உறுதியைத் தரப் பிரார்த்திக்கிறேன்.

வடுவூர் குமார் said...

இந்த நிலையிலும் எழுதுகிறீர்களே...!!!
மீதி இருக்கும் காலத்தையாவது வலியில்லாத்தாக இருக்க ஆண்டவன் அருள் புரியவேண்டும்.
கண்ணீர் மல்க எழுதுகிறேன்.
வானத்தில் நீங்கள் இப்படி வருகிறீர்கள் நான் சிங்கை நோக்கி போகிறேன்.பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்று இருக்கிறது.

து.மது said...

நலம் பெற பிராத்தனைகள்

Anonymous said...

நண்பர் சீனாவின் பதிவைப் படித்த பின்தான் இது பற்றித் தெரிந்துகொண்டேன்.நான் தினம் ருத்ரம்,சமகம் ஜபம் செய்து சிவ பூஜை செய்பவன்.இன்று முதல் என் பூஜையில் சகோதரிக்காகப் பிரார்த்திக்கத் தொடங்கி விட்டேன்.அந்த ஆலவாய்ப் பெருமானின்,அன்னை மீனாட்சியின் ஊரில் அவர்கள் அருட் பார்வையில் உள்ளீர்கள்.
அனைத்துப் பதிவர்களின் பிரார்த்தனைகளின் பலம் உங்களுக்காக உங்களுடன் இருக்கிறது.நல்லதே நடக்கும்.ஓம் நமச்சிவாய.

தமிழ்பித்தன் said...

எனது குலதெய்வம் வைரவரை பிரார்த்திக்கிறேன்

நளாயினி said...

தைரியமாகஇருங்கள்.

gulf-tamilan said...

இறைவன் உங்களுக்கு மன உறுதியைத் தரப் பிரார்த்திக்கிறேன்!!!
நலம் பெற பிராத்தனைகள்

Anonymous said...

Praying God to give you and Anu the courageand confidence.
May God be with you...

With prayers,
Mullai

கண்மணி/kanmani said...

அய்யா துளசி சொன்ன மாதிரி நீக்கியிருந்தால் இப்படி நீடித்திருக்காதோ? சிலசமயம் இயற்கைக்கு மீறி போராடினாலும் மனிதர்களால் ஜெயிக்க முடியவில்லையே.
தற்சமயம் அனும்மாவிற்கு அமைதியும் அன்பும் கிடைப்பதே போதும்.
முடிந்தால் திருக்கடையூர் கால சம்ஹார மூர்த்தியை தரிசித்து வாருங்கள்.
அத்துடன் கும்பகோணம் அருகிலிருக்கும் ஸ்ரீ வாஞ்சியம் சென்று வழிபடுங்கள்[எமதர்மராஜர் கோயில் உள்ளது]
அந்தக் கடவுளாவது அனுவின் ஆயுளை நீட்டி வேதனைகளைக் குறைக்கட்டும்.

Ramprasath said...

நலம் பெற பிராத்தனைகள

-Ramprasath

ஜே கே | J K said...

நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம்...

Unknown said...

அய்யா, என்ன சொல்வதென்று தெரியாமல் பல முறை பதிவுக்கு வந்து துன்பத்துடன் சென்று விட்டேன்.

உங்களுக்கு என் வந்தனங்கள். இப்படி ஓர் அருமைக் கணவரும் பிள்ளைகளும் (எங்களையும் சேர்த்து) கிடைத்ததை எண்ணி பெருமைப்படச் சொல்லுங்கள் அம்மாவை. அவர்கள் மன உறுதிகொள்ள வேண்டும். இனி யமபயமில்லை!

ஸ்ரீவாஞ்சியம் முடிந்தால் போய் வரவும் அல்லது தெரிந்தவர்கள் மூலம் ப்ரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். இத்தனை பேர் மருகி சொல்கிறோம்... கேளாதிருப்பாரா? சமயபுரத்தாளை நானும் வேண்டுகிறேன்.

அனுராதா said...

வருகை தந்து வாழ்த்தியவர்களுக்கும்,பிரார்த்தனைகளுக்கும் நன்றி.அனுராதாவிடம் பின்னூட்டங்களைப் படித்துக் காண்பித்தேன்.முழுவதும் கேட்டுக்கொண்டாள்.........அனுராதாவின் கணவன் எஸ்.கே.எஸ்.......

Premlatha said...

Sir,

I also got operated in large intestine for cancer in 2002. Now i am ok with god's grace. I wish your mrs also get quick recovery. Our prayers are always with your wife.

premlatha

Anonymous said...

++ போஸிடிவ் ஆக சிந்திக்க பாருங்கள்.

கடினம்தான் ஆனாலும் தயவு செய்து முயற்சி பண்ணிப் பாருங்கள்.

மாற்று மருத்துவங்களை பயன்படுத்தி பார்த்தீர்களா,முக்கியமாக வந்தவாசி அருகிலிருக்கும் டோக்டர்.பலராமைய்யா குடும்பத்தினரின் சித்த மருந்துகளை..?

சென்னையில் அவர் குடும்பத்தினர்கள் மருந்து கொடுக்கிறார்கள். விருகம்பாக்கத்தில் இருந்தது அவர்கள் வீடு..

தகவலுக்காக - இது உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஊக்கமளிக்கும் என்ற நம்பிக்கையில்:

பிரேம்லதா போல புற்றுநோயிலிருந்து பிழைத்த மற்றொரு ஆள் நான்.

எனக்கு இடது கண்ணில் - கண்ணீர் சுரப்பியில் வந்தது புற்றுநோய்..
(non hodgkins lymphoma)

கதிரியக்க -ரேடியேஷன் சிகிச்சை 2 வருடங்கள் செய்தும் உதவவில்லை. சித்த மருந்துகள்தான் உதவியிருக்க வேண்டும், தற்போது 14 + வருடங்களாக பு.நோய் திரும்பவில்லை..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் மனவலிவு கூட வேண்டுமென இயற்சக்திகளை பிராத்தித்துக் கொள்கிறேன்.

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி அனுராதா

நான் சென்னை சென்று இன்று தான் வந்தேன். நாளை காரைக்குடி செல்கிறேன். நாளை மாலை சந்திக்க முயல்கிறேன். கடவுளின் கருணை மழை, சக பதிவர்களின் கண்ணீராலும், பிரார்த்தனைகளாலும் உன் மீது எப்போதும் பொழிய வேண்டுகிறேன்.

cheena (சீனா) said...

தங்களைச் சந்தித்து வந்த பின்னர் ஒரு பதிவிட்டேன். அதன் சுட்டி :

http://cheenakay.blogspot.com/2007/11/blog-post_26.html

நன்றி