Friday, March 21, 2008

"அவாஸ்டின்" என்னும் இன்னொரு மருந்து

ஒரு வாரம் கழித்து டிசம்பர் 25-ம் தேதியன்று மருத்துவமனைக்குச் சென்றோம்.நாங்கள் வழக்கமாகப் பார்க்கும் டாக்டர் கிருஷ்ணகுமார் இல்லை.வேறொரு டாக்டரைப் பாருங்கள் என்றனர்.எனவே திரு.ஜெபசிங் என்ற மெடிகல் ஆன்காலஜி(கீமோதெரபி சிகிச்சை நிபுணர்) டாக்டரைப் பார்த்தோம்.அவர் ரிக்கார்டுகளைப் பார்த்தபின்னர் என்னையும் பரிசோதித்தார்.பிறகு "ஒரு கீமோ மாத்திரை சிறிது காலம் தினமும் உட்கொள்ள வேண்டும்.முதலில் அம் மாத்திரை உங்களுக்கு சேர்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.ஸோ,இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டியிருக்கும்.என்றைக்கு வருகிறீர்கள்?"என்று கேட்டார்.

முதலில் நான் திகைத்துப் போனேன்.மாத்திரை சேர்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யவே இரண்டு நாட்கள் தங்கவேண்டும் என்றால் அவ்வளவு வீரியம் வாய்ந்த மாத்திரையா என்று நினைத்தேன்.
"சரி டாக்டர்.இன்றைக்கே அட்மிட் ஆகி விடுகிறேன்."என்றேன்உடனே டாக்டர் மாத்திரையின் பெயரை எழுதிக் கொடுத்தார்.பார்த்தால்,ஏற்கனவே நான் உட்கொண்டு வரும் "எக்செமெஸ்டேன்"(Exemestane) என்ற கீமோ மாத்திரை தான்."டாக்டர்.இந்த மாத்திரையைத் தான் நான் தினமும் இரவு ஒரு மாத்திரை போன ஆகஸ்டிலிருந்தே சாப்பிட்டு வருகிறேனே"என்றேன்.
ஒரு வினாடி டாக்டர் திகைத்துப் போனார்.பிறகு"ஓகே.இதையே தொடர்ந்துசாப்பிட்டு வாருங்கள்"என்றார்.வேறு மாத்திரை தேவை இல்லை என்றும் மீண்டும் ஒரு மாதம் கழித்து வருமாறும் கூறி விட்டார்.

வீட்டுக்குத் திரும்பும் வழியெல்லாம் என் கணவருடன்ஒவ்வொன்றாக விவாதித்துக்கொண்டே வந்தேன்.சென்னையில் சிகிச்சை பெறும்போது "ஹெர்சப்டின்"என்ற விலை உயர்ந்த ஊசியுடன் கீமோ ஊசியும் போட்டுக் கொண்டேன்.அதற்குமேல் அடுத்த சிகிச்சை இல்லை.ஆனால் இங்கோ ரேடியேசனுக்குப் பின்னர் ஒரே ஒரு கீமோ மாத்திரை மட்டுமே போதும் என்கிறார்களே.ஒரே குழப்பமாக இருந்தது.

மூன்று நாட்கள் வரை இதே சிந்தனை தான்.என் கணவரும் நானும் சிங்கப்பூரிலுள்ள எங்கள் மகனுடன் தினமும் பேசும்போது இதைப் பற்றியும் விவாதித்தோம்.ஏன் எங்கள் வழக்கமான டாக்டர் கிருஷ்ணகுமாரைப் பார்க்கக் கூடாது?அவரிடமே கேட்டு விடுவோமே!

மறுநாள் 22ந் தேதிடிசம்பர் 2007 சனிக்கிழமை டாக்டருக்கு செல்போனில் தொடர்பு கொண்டோம்.புத்தாண்டு பிறந்தபின் சனவரி 2ந் தேதி மருத்துவமனைக்கு வரச் சொன்னார்.அன்றிரவு எங்கள் மகனிடம் விபரத்தைச் சொன்னேன்.டாக்டரிடம் பேசும்போது வேறு சிகிச்சைகள் இருந்தால்
தெரிவிக்குமாறும் செலவு அதிகமானாலும் பரவாயில்லை என்பதைத் தெளிவாகக் கூறுமாறும் சொன்னான்.

2ந் தேதி சனவரி 2008 அன்று டாக்டரைப் பார்த்தோம்.நாங்கள் கூறுவதை டாக்டர் கவனமாகக் கேட்டுக் கொண்டார்.பிறகு"இதே கேள்வியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேட்டிருந்தால் வேறு மருந்து இல்லை என்றே சொல்லியிருப்பேன்.இப்போது சமீபமாக அவாஸ்டின்(Avastin)என்னும் ஒரு ஊசி{ BEVACIZUMAB என்பது அதன் மருத்துவப் பெயராம்}மருந்து போடப்படுவதாகவும் ஒரு தடவைக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும் என்றும் அத்துடன் paclitaxel என்னும் கீமோ ஊசியும் சேர்த்துப் போட வேண்டும் என்றும் கூறினார்.இந்த சிகிச்சை உங்களைப் போல வசதி உள்ளவர்கள்"கேட்டால் மட்டுமே" சொல்வதாகவும் அத்தகையவர்கள் கூட சில பேர் அதிக செலவு செய்யத் தயங்குகிறார்கள் என்றும் எனவேதான் பொதுவாக அனைவரிடமும் இதைச்சொல்வதில்லை என்றும் கூறினார்.
எனக்கு அப்பாடா என்றிருந்தது.சிகிச்சைக்கு உடனே சம்மதம்தெரிவித்துவிட்டேன்.

டாக்டர் அம்மருந்தின் பெயரை ஒரு சீட்டில் எழுதி என் கணவரிடம்கொடுத்தார்."நீங்களே இதைப் பற்றி இன்டர்நெட்டில் பாருங்களேன்.avastin monoclonal antibody என்று டைப் செய்து பிரெளஸ் செய்து பாருங்கள்.ஏதாவது சந்தேகம் வந்தால் தயங்காமல் கேளுங்கள்"என்றார்.மறுநாள் காலை அட்மிட் ஆகும்படி சொல்லிவிட்டார்.
மனநிம்மதியுடன் வீட்டுக்குத் திரும்பினோம்.அன்றிரவு எங்கள் மகனிடம் விபரம் தெரிவித்தோம்.

மறுநாள் காலை மருத்துவமனை சென்று அட்மிட் ஆனேன். அன்று எக்கோ டெஸ்ட்,பிளட் டெஸ்ட்,ஈ.சி.ஜி.எல்லாம் எடுத்தார்கள்.மறுநாள்சனவரி 4ந் தேதி முதலில் அவாஸ்டின் மருந்தும் அடுத்து பேக்லிடாக்ஸல் கீமோ மருந்தும் கை நரம்பு வழியாக ஊசிமூலம் டிரிப் ஏற்றுவதுபோல ஏற்றினார்கள்.அன்று முழுதும் மருத்துவமனையிலேயே அவர்களின் கண்காணிப்பில் இருந்தேன்.திரும்ப அடுத்த ஊசி போடுவதற்காக ஒரு வாரம் கழித்து 11ந் தேதி வருமாறு டாக்டர் கூறினார்.அடுத்த நாள்5ந் தேதி வீட்டுக்குத் திரும்பினோம்.

முதலிரண்டு நாட்கள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அட,பரவாயில்லையே என்று சந்தோஷப்பட்டேன்.மறுநாள் கீமோ மருந்து தன் வேலையை ஆரம்பித்தது.காலையில் எழுந்து பல் விளக்கும் போதே வாயெல்லாம் எரிந்தது.வேறென்ன!வாய்ப்புண் தான்.

டாக்டரிடம் செல்போனில் கேட்டதில் வைடமின் சி மாத்திரையை தினமும் மூன்று தடவை நன்றாக சப்பிச் சாப்பிடுமாறு கூறினார்.அவ்வறே செய்தும் வாய்ப் புண் குறையவில்லை.அன்றிலிருந்து என் உணவுமுறையே மாறி விட்டது.எதிலும் சுத்தமாகக் காரமே இல்லாமல் காலையில் சட்னியோ சாம்பாரோ!மதிய உணவிலும்இரவிலும் இதே கதை தான்.காலை எழுந்ததும் நல்லெண்ணையில் வாய் கொப்பளிப்பது,டிபன் சாப்பிடுமுன் இளஞ்சூடான உப்புநீரில்வாய் கொப்பளிப்பது,வாய்ப்புண் மேல் வெண்ணெய் தடவி பின்னர் சாப்பிட முயற்சி செய்வது.இப்படி என்னென்னவோ செய்தும் பலனில்லை.உணவே பிடிக்கவில்லை.நாக்கின் சுவைமொட்டுகள் மறத்துப் போய் விட்டது. .இப்படியே அடுத்த வாரமும் வந்தது.

5 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சகோதரி!
எல்லாமே மலைப்பாக இருக்கிறது.

வடுவூர் குமார் said...

யப்பா!! விஞ்ஞானிகளே..
சீக்கிரம், இவ்வளவு பின் விளைவுகள் இல்லாமல் ஏதாவது மருந்து கண்டுபிடிங்கப்பா..
படிக்கும் போதே குப்புனு வேர்க்குது.

அனுராதா said...

வாங்க யோகன் பாரிஸ்.வடுவூர் குமார்.நன்றி.

cheena (சீனா) said...

புதுப் புது மாத்திரைகள் - புதுப் புது பின் விளைவுகள் - ஆண்டவா ...........

ராஜா சந்திரசேகர் said...

அனு
வலியை வெல்கிறது உங்கள் எழுத்து.
ஆனாலும் படிக்க வலிக்கிறது மனது.
அன்பும் நன்றியும்.
ராஜாசந்திரசேகர்